Part 23

பக்கம் 23

ஆதிகேசவனின் கம்பனியின்,  மிகப்பெரிய ஷேர் ஹோல்டரான சுரேஷ்,  பதட்டம் அடைந்தான், அவனை பார்க்க அபிமன்யு காத்திருப்பதாக,  அவனுடைய பிஏ சொன்ன போது. அபியை தனது அறைக்கு அனுப்பி வைக்குமாறு அவன் பதிலளித்துவிட்டு,  தன்னை சுதாகரித்துக் கொண்டவன் அபியையும்,  அமரையும் வரவேற்றான். சுரேஷ் தன்னை அமர செல்வதற்கு முன்பு தானாகவே அமர்ந்துகொண்டான் அபிமன்யு.

"ஃபேஷன் உலகின் முடிசூடா மன்னனை என் கம்பெனியில பாக்குறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றான் சுரேஷ்.

"எனக்கும் தான்" என்றான் அபிமன்யு.

"நீங்க இங்கே எதுக்காக வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா, என்னை மன்னிச்சிடுங்க. என்னால உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது"

"நீங்க நினைக்கிற மாதிரி என்னை  அவ்ளோ சீக்கிரம் யாராலும் யூகிக்க முடியாது" என்று கூறிய அபிமன்யு,  அமரை பார்க்க,  அமர் வெளியில் சென்று,  தன்னுடன் ஒருவரை அழைத்து வந்தான். அந்த நபரை பார்த்த மாத்திரத்திலேயே,  சுரேஷ் நம்ப முடியாதவனாய் அவன் பார்வையை அபியின் பக்கம் திருப்பினான்.

"மீட் மிஸ்டர் செல்வராஜ். என்னோட ஃபிரண்ட். இவரு..."

"ஏசிகே சிமெண்ட் ஓனர்..." அபி முடிக்கும் முன் சுரேஷ் முடித்து வைத்தான்.

"நீங்க இவரைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனா உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கு... நான் சொன்னா அவர் எதையும் செய்வார்..."

அதை கேட்ட சுரேஷ் மென்று முழுங்கினான்.

"பேஷன் உலகத்தை விட, நீங்க  மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது,  உங்க குடும்ப வியாபாரமான கன்ஸ்ட்ரக்ஷன் பிசினெஸ்க்கு தான்னு எனக்கு நல்லா தெரியும். ஆதிகேசவன் மாமாவுக்காக,  நீங்க உங்க குடும்ப கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீங்கனு நினைக்கிறேன். சிமெண்ட் தட்டுப்பாடால,  நீங்க உங்க பிசினஸ்ல தடுமாறிகிட்டு இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீங்க விருப்பப்பட்டா  அதைச் சரிக்கட்டவும் என்னால முடியும்." என்று கூறிவிட்டு அவரைக் கூர்ந்து கவனித்தான் அபிமன்யு.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. என்னோட 100 மில்லியன் டாலர் பிராஜக்ட் பாதியிலேயே நிக்குது. நான் ஏற்கனவே செல்வராஜை இது விஷயமா சந்திச்சேன். ஆனா அவரால எனக்கு உதவ முடியாதுன்னு சொல்லிட்டாரு"

"உங்களுக்கு உதவுறதுல் சில பிரச்சனைகள் இருக்கு சுரேஷ். ஆனா அபிமன்யு போல சில பேரால தான் அதெல்லாம் சரிக்கட்ட முடியும்" என்றான் செல்வராஜ்.

"சரி... உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க" என்று வழிக்கு வந்தான் சுரேஷ்.

"அப்போ நான் கிளம்புறேன். நீங்க கண்டினியு பண்ணுங்க. உங்க ஆர்டர்க்காக  நான் காத்திருப்பேன்" என சொல்லி அங்கிருந்து வெளியேறினான் செல்வராஜ்.

"நான் என்ன செய்யணும்?" என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் சுரேஷ்.

அபிமன்யு அமரை பார்க்க அவன் ஒரு ஃபைலை சுரேஷின் மேஜையின் மீது வைத்தான். ஆதிகேசவனின் கம்பெனியில்,  சுரேஷுக்கு இருக்கும் பங்குகளை அபியின்  பெயரில் மாற்றுவதற்கான ஒப்பந்த பாத்திரம் தான் அது. எந்த இரண்டாவது யோசனையும் இல்லாமல்,  அதில் தனது கையெழுத்துக்களை பதித்தான் சுரேஷ்.

"உங்களுக்கு என்ன தேவையோ,  அது எல்லாமே செல்வராஜ் மூலமா உங்களுக்கு வந்து சேர்ந்திடும்" என வாக்களித்தான் அபி.

"நான் அடிக்கடி யோசிக்கிறதுண்டு,  எப்படி இந்த சின்ன வயசுல ஒரு பையனால இவ்ளோ தூரம் சாதிச்சி காட்ட முடியும்னு. அதற்கான பதில்,  எனக்கு இன்னைக்கு கிடைச்சிருக்கு. புத்தியும், வியாபார யுக்தியும் இருந்தா, அனுபவம் தேவையில்லை, அப்படிங்கறத நான் இன்னைக்கு புரிஞ்சுகிட்டேன். எதிராளியின் பலத்தை தெரிஞ்சுகிறது எந்த அளவுக்கு முக்கியமோ,  அதே அளவுக்கு பலவீனத்தையும். தெரிஞ்சு வச்சிருக்கனும்கறதயும் இன்னைக்கு நான் உன்கிட்ட கத்துக்கிட்டேன். அடுத்தவங்களோட பலவீனத்துல அடிக்கிறதுல நீ ரொம்ப பெரிய கில்லாடி" என்றான் சுரேஷ்.

"நான் கிளம்பறேன்" என்று இருக்கையை விட்டு எழுந்தான் அபிமன்யு.

"அடுத்தவங்களோட புகழ்ச்சிய,  காதுல வாங்காம இருக்குறதும் உன்னோட வெற்றிக்கு ஒரு காரணமா?" என்று சுரேஷ் கேட்க...

"போகலாமா, அமர்?" என்று சிரித்தபடி அங்கிருந்து கிளம்பினாள் அபி.

அவன் செல்வதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சுரேஷ்,  இவன் உண்மையிலேயே அசாதாரணமானவன் தான் என்ற தொனியில்.
.....

அபியும் அமரும் ஏபி ஃபேஷன்சை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

"அடுத்தது என்ன அபி?"

"இப்போதிலிருந்து,  நம்ம ஒவ்வொரு அடியையும் கவனமா எடுத்து வைக்கணும். நான் செய்ய வேண்டியதைப் பத்தி நான் பாத்துக்குறேன். நீ என்ன செய்யணும்கிறதுல கரெக்டா இரு"

"ஆதிகேசவன் கம்பெனியோட ஹயர் ஷேர் ஹோல்டர்,  இப்ப நீ தான். 51%... அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?"

"நீ சொல்றது சரி தான். ஆனா அதுக்காக நான் அவர் கம்பெனியோட சிஇஓ சேரில் உட்கார போறனு அர்த்தமில்லை"

"என்ன? அப்படி  செய்யபோறதில்லையா?" என்று அதிர்ச்சியாக கேட்டான் அமர்

"அவங்களுக்கு என் மேல கோவம் வரணும்னு,  தூண்டி விட தான் இப்படி செஞ்சேன். இதுக்கு அப்புறம்,  அவங்க நிச்சயமா சும்மா இருக்க மாட்டாங்க. எனக்கு அவங்களோட அதிரடி நடவடிக்கை வேணும். நான் காத்திருந்து  அலுத்துட்டேன்" என்றான் தோள்களை குலுக்கி.

"உன்னை  புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம்" என்று என சிரித்தான் அமர்.

"நம்ம இலக்கு சரியா இருக்கும் போது, ஏன் வேண்டாத விஷயத்தில் கவனத்தை செலுத்தணும்?"

"நீ சொல்றது சரி தான். இப்ப நம்முடைய டார்கெட்டே வேறயாச்சே"

ஆமாம் என்று தலையை அசைத்து சிரிதான் அபி.

*சாந்தி நிலையம்*

நடந்தவை அனைத்தையும் அனைவரிடமும் விவரித்தான் அபி.

"ஆதி மாமாவுடைய நிலைமை என்ன?" அஞ்சலி கேட்க

"யாருக்கு தெரியும்?" என்றான் அபி.

"நம்ம கேர்லெஸ்ஸா இருக்க கூடாது" என என்றான் ஷ்யாம்.

"யாழினி விஷயத்துல நான் கேர்லெஸ்ஸா இருப்பேன்னு  நீங்க நினைக்கிறீங்களா?"

"இல்ல சின்னா,  அவரு யாழினியோட அப்பாங்குறத நம்ம மறந்திட கூடாது"

"அந்த ஒரே ஒரு காரணத்திற்காக தான் அவர் இன்னும் உயிரோட இருக்கார்" என்று பல்லை நறநறவென்று கடித்தான் அபி

"சின்னா,  என்ன பேச்சு பேசுற நீ?  ஏன் இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசுற?"

"யாழினிக்கு அவரு, எப்படிப்பட்ட மாப்பிள்ளை பார்த்திருக்காருன்னு,  உங்களுக்கு தெரியாது. அவர் என்ன வேலை பண்ணி வச்சிருக்கார் தெரியுமா?" என்றான் கோவமாக.

எல்லோரும் அவனை பார்க்க,

"அந்த கிரீஷ்,  ஏதோ ஒரு பொண்ணோட மூணு வருஷமா ரிலேஷன்ஷிப்ல இருக்கான்"

"என்னது...?  ஆதி மாமாவுக்கு,  எப்படி இது பற்றி தெரியாம போச்சு?"

"அவருக்கு என் மேல இருக்குற வெறுப்பு அவரோட கண்ணை மறச்சிருக்கு"

"இது சுத்தப் பைத்தியக்காரத்தனம்" என்றான் நந்தா

"இல்லாத ஒரு காரணத்தைச் சொல்லி,  யாழினியை  எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொன்னாரு. ஆனா இப்ப பாரு,  நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு,  தப்பு பண்ணிகிட்டு இருக்காரு"

"அவருக்கு உண்மை தெரிய வரும் போது நிச்சயமா உடஞ்சி போயிடுவார்" என்று சோகமாய் சொன்னாள் அஞ்சலி.

"அது அவருக்கு சரியான தண்டனைதான்" என்றாள்  லாவண்யா.

"சில நேரங்களில்,  அதிகப்படியான பாதுகாப்பு உணர்வு,  இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்" என்று கவலையுடன் சொன்னார் மாமி.

"சரி நான் சொல்றத எல்லாரும் கவனமா கேளுங்க. உண்மையான சூழ்நிலைகளை நீங்க புரிஞ்சுக்க அது உதவும்"

அவன் சமீபத்தில் அவனுடைய ஆட்களால் திரட்டப்பட்ட அத்தனை விஷயங்களையும்,  அவர்களுடன் பகிர்ந்து கொண்டான். அவர்கள் சந்தோஷமாகவும்,  கவலையுடனும்,  அதே நேரத்தில் கோபமாகவும் உணர்ந்தார்கள். அவர்களால் அவற்றையெல்லாம் நம்பவும் முடியவில்லை,  நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அபியின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டபட வேண்டியவையே. அவர்கள் அவனுடைய திறனை,  குறைத்து மதிப்பிட்டது இல்லை. இன்று அவர்கள் நேரடியாக அதை காண்கிறார்கள்.

......

அபி தனது அறையில் பதைபதைப்புடன் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தான். யாழினியின் பதில் என்னவாக இருக்கும்?  ஒரு வேளை அவள் மகாவின் வழிநடத்தளுக்கு உட்பட்டால்,  பிரச்சனை ஏதும் இருக்காது. ஆனால் ஆதிகேசவன் அதை நடக்க விடுவார் என்பது நிச்சயமல்ல. அவன் தன் அலமாரியில் இருந்து ஒரு புடவையை எடுத்தான். அது,  அவன் யாழினிக்காக டிசைன் செய்தது. அவளுடைய விபத்திற்கு முன்,  தனக்கு வேண்டும் என்று யாழினி,  அவனிடம் கேட்டிருந்தாள். கட்டிலின் மீது அமர்ந்து அந்த புடவையை பார்த்தபடி தனது நாட்களை பின்னோக்கி நகர்தினான்,  அபிமன்யு.

மூன்று மாதங்களுக்கு முன்பு

ஏ பி  ஃபேஷன்ஸ்

ஜன்னலின் வழியாக வெளியில் பார்த்துக்கொண்டு,  போனில் பேசிக்கொண்டிருந்தான் அபிமன்யு. அப்போது அவனுடைய கண்களை,  பின்புறமாக இருந்து யாரோ மூட,

அதை யார் என்று அறிந்து கொண்டவனாய் அழகான சிரிப்பை உதிர்த்தான். அது யாழினியை தவிர வேறு யாராக இருக்க முடியும்,  என்றபோதிலும் அவளுடன் சற்றே விளையாடி பார்க்க நினைத்தான்.

"சீமா? நிர்மலா? நான்சி?" என்று வரிசையாக பெண்களின் பெயர்களை கூறினான்.

அவன் கண்களிலிருந்த கைகளை விடுவித்துக் கொண்டு,  கைகளை கட்டிக்கொண்டு நின்றாள் யாழினி.

"கீதாவையும் ப்ரியாவையும் விட்டுட்ட?  அவங்க எல்லாம் உன்கிட்ட ரொம்ப வழிஞ்சாங்கனு, நீ  வேலையை விட்டு தூக்கினவங்க"

அவளை தனது அருகில் இழுத்து கொண்டவன்,

"என்னை  நீ கண்காணிக்குறதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றான்.

"உலகத்திலேயே கண்காணிக்கப்படுறதுக்காக சந்தோஷப்படுறவன் நீயா தான் இருப்பே. பாவம் அந்த பொண்ணுங்க,  இனிப்பா இருக்கும்னு  நினைச்சி  தெரியாம பாவகாய கிடைச்சிருச்சுங்க" என்றாள்  யாழினி.

"அவங்களுக்கு,  இன்னொரு விஷயமும் தெரியாது. அந்த பாவக்கா மேலே ஒரு தேனடை பொண்ணு, தேனை  சிந்திகிட்டு இருக்கான்னு"

"வாவ்... எப்பத்திலிருந்து ஹிட்லர்,  ஒரு புலவனா மாறினான்?"

"ஹிட்லருக்கும் ஒரு காதல் கதை இருந்தது மேடம்"

"ஆமா அவங்க ரெண்டு பேரும் ஒன்னாவே செத்து போய்ட்டாங்க.  எனக்கும் அதே மாதிரி ஒரு முடிவு வரணும்னு ஆசையா இருக்கு. நான் இப்பவே உன் கூட சேர்ந்து சாகணும்னா கூட தயாரா இருக்கேன்"

அவள் கைகளை கோபமாக பற்றியவன்

"வாய மூடுறியா?"

"மாம்ஸ்,  ஐ ஜஸ்ட்..."

"நீ என்ன நெனச்சிட்டு இருக்க என்னை பத்தி?  யாருமே தொந்தரவு கொடுக்காத ஒரு தனியான உலகத்துல நான் உன்னோட வாழ்ந்துக்கிட்டிருக்கேன் தெரியுமா உனக்கு?  உன்னால கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாது... உன் கூட வாழ போற அந்த நாளுக்காக நான் எவ்வளவு எதிர்பார்ப்போட காத்திருக்கேன்னு. முடிஞ்சா,  சாவு இல்லாத ஒரு வாழ்க்கை வாழணும் உன்னோட. வாழ்க்கை சாகுறதுக்கு இல்ல,  கடைசி வரைக்கும் ஒன்னா வாழ்ந்து கட்றதுல தான் இருக்கு"

"சாரி, மாம்ஸ்..."

அவள் பேசி முடிக்கும் முன் அபியின் ஃபோன் ஒலிக்கத் தொடங்கியது. அது அமருடைய அழைப்பு தான்.

"நான் வந்துகிட்டு இருக்கேன்" என கூறி போனை துண்டித்தான்.

"நான் போயாகணும்,  இன்டர்நேஷனல் கிளைன்ட் மீட்டிங்காக எல்லாரும் காத்திருக்காங்க. நான் உன்கிட்ட அப்பறம் பேசுறேன்".

யாழினியை பார்க்காமல்,  எங்கோ பார்த்துக்கொண்டு பேசி விட்டு,  அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அபிமன்யு, யாழினியை சங்கடத்தில் விட்டு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top