Part 11


பாகம் 11


*சேதுராமன் இல்லம்*

என்றுமில்லாத புத்துணர்ச்சியுடன் இருந்த இனியாவை பார்த்த பொழுது, சீதாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், சீதா இனியாவை எதுவும் கேட்கவில்லை. அவளாகவே செல்லட்டும் என்று காத்திருந்தார்.

" அம்மா, நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்"

" எந்த கோயிலுக்குமா போற?" ஆர்வமாய் கேட்டாள் சீதா.

" *நூல்* புக்மார்ட்டுக்கு எதிர்ல இருக்குற அம்மன் கோவிலுக்கு போறேன்."

அவளுடைய பதில், சீதாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அவள் சரி என்று தலையசைத்தாள். தனது தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தாள் இனியா. காலம் தாழ்த்தாமல், சேதுராமனுக்கு போன் செய்து சீதா விஷயத்தை கூற, நிம்மதி பெருமூச்சு விட்டார் சேதுராமன்.

இதற்கிடையில், வீட்டிற்கு வந்த சத்யா, இனியா கோவிலுக்கு சென்றிருக்கும் விஷயத்தை அறிந்து ஆச்சரியம் அடைந்தான். அவனுடைய மூளை விரைவாக வேலை செய்தது. தனது போனை எடுத்து, எண்களை அழுத்தினான்.

*நூல்* புத்தக நிலையம்

வழக்கம்போல், தனது கடையில் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான் பாரி. கோவிலுக்குள் நுழைந்த இனியாவை கண்டதும், அவன் பார்வை, அவள் மீது வேர்விட்டு நின்றது. அவளுடைய திருமண முறிவிற்குப் பின், அவள் வீட்டை விட்டு வெளியே வருவது இதுதான் முதல் முறை. அவளுடைய முகத்தை, அவனால் சரியாக பார்க்க முடியவில்லை. அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு கோவிலுக்கு ஓடினான். இனியா கண்களை மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

அவள் பிரார்த்தித்து முடிக்கும் வரை, தொந்தரவு செய்யாமல், அமைதியாக அவள் எதிரில் நின்றான் பாரி. மூடியிருந்த அவள் கண்களில் இருந்து, கண்ணீர் வழிந்தது. அதை பார்த்த பொழுது, அவன் மனம் வலித்தது. ஆனால், அதே நேரம், அவளுடைய முகத்தில், ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது.

கண்களை மெதுவாக திறந்தபோது, பாரி தனது முன் நிற்பதை பார்த்து, ஒரு நொடி ஸ்தம்பித்து போனாள் இனியா. சில நொடிகள், தன்னை மறந்து, அவனையே பார்த்துக்கொண்டு அவள் நின்றிருந்தாள். அப்போது, ஒரு குரல், அவளுடைய பார்வையை தன் பக்கம் திருப்ப செய்தது. அது வேறு யாருமில்லை, சுபாஷ் தான். எதிர்பாராத நேரத்தில் அவனை பார்த்த மாத்திரத்திலேயே இனியா பதட்டம் அடைந்தாள். இந்த சந்தர்ப்பத்திற்கு அவள் தயாராக இல்லாதிருந்த போதிலும், அவள் எதிரில் நின்றிருந்த மிகப்பெரிய விஷயத்தை அவள் கொன்று குவிக்க தயாரானாள். ஒரு இறுதியான முடிவை, சுபாஷுக்கு மட்டுமல்ல, பாரிக்கும் கொடுக்க அவள் முடிவெடுத்தாள்.


" சத்யா சொன்னான், நீ கோவிலுக்கு வந்திருக்கேன்னு. அதான் உன்னை பார்க்கலாம்ன்னு நான் இங்கே வந்தேன்" என்றான் சுபாஷ்.

" சொல்லுங்க" என்றாள் முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல்.

" இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்"

" நீங்க எத பத்தி பேசுறீங்க?" என்றாள் சலனமில்லாமல்.

" நான் கிட்டத்தட்ட, எங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ணிட்டேன்"

" ஒருவேளை, கொஞ்ச நாள் கழிச்சு, உங்க அம்மா, மறுபடி என்னை குத்தி காட்ட ஆரம்பிச்சா என்ன செய்வீங்க?"

" அப்படியெல்லாம் நடக்காது"

" எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?"

" எனக்கு நம்பிக்கை இருக்கு"

" எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமில்லை"

" ஆனா... "

" உங்களுக்குத் தான் தெரியுமே, எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லைன்னு"

" ஆனா, நீதான் என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சியே "

" நான் சம்மதிக்கிலை. உண்மையைச் சொல்லப்போனா, என்னுடைய விருப்பத்தை யாரும் கேட்கலை. எங்க அண்ணனும், அப்பாவும் சேர்ந்து எடுத்த முடிவு அது."

" எனக்கு தெரியும் நீ என் மேல கோவமா இருக்கேன்னு. தயவு செய்து கொஞ்சம் நிதானமா யோசிச்சு... "

அவனை மேலே பேச விடாமல் தடுத்தாள் இனியா.

" உங்களுக்கு பாரியை தெரியுமில்ல?"

" ஆமாம் உன்னுடைய ஃப்ரெண்ட்"

" அவர் இனிமே எனக்கு ஃபிரண்டா இருக்கப்போறதில்லை"

" அப்படின்னா? "

" நான் அவரை தான் காதலிக்கிறேன். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்"

திடமாக தன் தலையை நிமிர்த்தி கூறினாள் இனியா.

சுபாஷுக்கு மட்டுமல்ல, பாரிக்கும் அவனை சுற்றி வீசிக்கொண்டிருந்த காற்று, நின்று போனது. இருவருமே மிதமிஞ்சிய அதிர்ச்சிக்கு ஆளானார்கள். சுபாஷுக்கு ஏமாற்றமும், பாரிக்கு அவன் வாழ்வின் மாற்றமும் கண்ணுக்கு தெரிந்தது.

இருவருமே முதன்முதலாக இனியாவிடமிருந்து *காதலிக்கிறேன்* என்ற வார்த்தையை கேட்டார்கள். சுபாஷ் எவ்வளவு முயன்றும், அதை இனியாவிடமிருந்து பெற, அவனால் இயலவில்லை. இறுதியாக, அவன் அந்த வார்த்தையைக் கேட்டபொழுது, அது அவனுக்கானதாக இருக்கவில்லை.


நட்பு என்னும் வார்த்தைக்கு மாற்றாக, முதன் முறையாக பாரியும் அந்த வார்த்தையை அவளிடமிருந்து கேட்டிருந்தான். எங்கு அவனுடைய நட்பு கெட்டு விடுமோ என்ற பயத்தில் இதுவரை அவன் சொல்லாமல் புதைத்து வைத்திருந்த அவனுடைய காதல் இன்று அங்கீகாரம் பெற்றது.

சுபாஷ் மனமுடைந்து போனான் என்பதை பாரி புரிந்துகொண்டான். விட்டால் சுபாஷ் அழுது விடுவான் போலிருந்தது. அவன் மெல்ல அங்கிருந்து சென்றான். அவன் செல்லும் வரை, இனியா பாரியின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் பாரியோ, அவள் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சுபாஷ் அங்கிருந்து சென்றதும், அவளும் கோவிலை விட்டு வெளியேறத் துவங்கினாள். அவளை அமைதியாய் பின்தொடர்ந்தான் பாரி. அவள் அவனிடம் பேசாமல் சென்றது அவனுக்கு மிகுந்த வேதனை அளித்தது. அவன் தானாகவே உரையாடலை துவக்கினான்.

" நீங்க சொன்ன பொய்யை, சுபாஷ் உண்மைன்னு நம்பிடான்னு நினைக்கிறேன்"

இதற்குள்ளாக, அவர்கள், இனியா தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த இடத்தை வந்தடைந்தார்கள்.

" யார் பொய் சொன்னது?" என்றாள் இனியா.

தனது ஆட்காட்டி விரலை மெல்ல அவளை நோக்கி உயர்த்தி, *நீ தான்* என்பது போல அவளை நோக்கி கையை நீட்டினான் பாரி.

" நான் எப்பவும் பொய் சொல்ல மாட்டேன்" என்று கூறிவிட்டு, அவனை நோக்கி ஒரு மென்மையான புன்னகையை வீசி விட்டு, அங்கிருந்து நகர்ந்தாள் இனியா.

நின்ற இடத்தில் அப்படியே அதிசயித்து நின்றான் பாரி. ஒருவேளை அவன் ஒரு மரமாக இருந்திருந்தால், ஆயிரக்கணக்கான வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கி இருப்பான். அவன் அப்படி ஒரு பரவச நிலையில் இருந்தான். அவனுடைய இதயம், வண்ண சிறகுகளுடன் உயரே பறந்து, அவனைப்பார்த்து கண்ணடிப்பது போல் உணர்ந்தான். இனியாவின் வார்த்தை உண்மையிலேயே உண்மைதானா? அவன் உயிருக்கும் மேலாக நேசிக்கும் பெண், அவனை காதலிப்பதாக கூறி விட்டாள். அதை நிச்சயிக்கும் வண்ணம் அவள் பொய்யுரைக்கவில்லை என்பதையும் நிச்சயமாக கூறிவிட்டாள்.

*நூல்* புத்தகக் கடையின் வாடிக்கையாளர்கள், அன்று ஒரு புதிய பாரியை கண்டார்கள். அன்று முழுவதும், மாறாத புன்னகையுடன், அவன் கடையில் உலவிக் கொண்டிருந்தான். அதை பார்த்த சில பெண்களின் இதயத்துடிப்பே நின்று போனது. தாங்கள் காண்பது உண்மையிலேயே உண்மைதானா, என்று நினைத்தார்கள் அவர்கள்.


*சேதுராமன் இல்லம்*

சேதுராமன் சீதாவும், இனியாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக, தாளாத ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். அவள் என்ன முடிவு செய்யப் போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவள் கோவிலுக்கு சென்றிருந்தது நல்ல அறிகுறியாக பட்டது. தங்களது முந்தைய தவறினால், மிகவும் மனம் உடைந்து போயிருந்த அவர்களுடைய வயிற்றில், அவளுடை செயல் பாலை வார்த்தது. கடவுளின் கருணையால், சுபாஷும், அவனது தாயும் எப்படிப்பட்டவர்கள் என்பது, திருமணத்திற்கு முன்பே அவர்களுக்கு தெரிந்து விட்டது. அதன்பிறகு பாரியின் அணுகுமுறை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதற்கும் மேலாக, இனியாவின் மனமாற்றம், அவர்களுக்கு புத்துயிர் அளித்தது.

அப்போது, அவர்கள் சத்யா கோபத்துடன் உள்ளே நுழைவதை கண்டார்கள்.

" என்னப்பா நடக்குது?" என்றான் காட்டமாக.

" நீ எதைப் பற்றிக் கேக்குற?" என்றார் சேதுராமன்.

" இப்பதான் சுபாஷ் எனக்கு போன் பண்ணினான். அவன் இனியாவை கோவிலில் பார்த்தானாம். அவள், அவனின் முகத்தில் அடித்தது போல, உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாளாம்"

சேதுராமனும் சீதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இனியா, பாரியை சந்திப்பாள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அவர்கள் எதிர் பார்த்திராத ஒன்றல்லவா நிகழ்ந்திருக்கிறது. இது என்ன சிவன் பூஜையில் கரடியை போல்... சுபாஷ் எதற்கு அங்கு சென்றான்?

" அவ வேற என்ன செய்யணும்னு நீ எதிர்பார்க்குற? " என்றார் சேதுராமன்.

" அப்பா, அவ ரொம்ப அப்செட்டா இருக்கா. கோவமா இருக்குற நேரத்துல, எந்த முடிவை எடுக்கிறதும் நல்லது இல்லை"

" ஆனா, தனக்கு என்ன தேவைன்னு முடிவெடுக்கிற உரிமை அவளுக்கு இருக்கு. ஏற்கனவே, நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளை அவமேல திணிச்சு, அவளை ஒரு வழி பண்ணிட்டோம். இனிமே அது நடக்கக் கூடாது. அவளுக்கு என்ன தேவைன்னு அவளே முடிவெடுக்கட்டும்" என்றாள் சீதா.

" அவளுக்கு நல்லது கெட்டது என்னமா தெரியும்? அவ இன்னும் சின்ன பொண்ணுதான்."

" அவ ஒரு எம்எஸ்சி பிஎட் கிராஜுவேட். இன்னும் அவளை ஒரு சின்ன பொண்ணுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கியா? பெரியவங்களா இருந்து, நம்ம மட்டும் என்னத்தடா சரியான முடிவு எடுத்தோம்?" சீதாவின் வார்த்தையில் பொறி பறந்தது.

" அம்மா, சுபாஷ் ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்கான்".


" போதும் நிறுத்து. அவன பத்தி இதுக்கப்புறம் நான் பேச விரும்பல. நீயும் சுயநலமா இருக்கிறத நிறுத்திக்கோ. உன்னுடைய பிசினஸை நீ எஸ்டாப்ளிஷ் பண்ணனும்னா, அதுக்கு உன்னோட திறமையை நம்பு. அதை விட்டுட்டு, உன் தங்கச்சியை பலிகடாவாக்காதே." பொரிந்து தள்ளினார் சேதுராமன்.

" ஆனால், நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க. இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு அப்புறம், அவளை யாரு கல்யாணம் பண்ணிக்குவா? அவளை யார் நம்புவா?"

" பாரி நம்புவான்"

" என்ன...? என்ன சொல்றீங்க நீங்க? "

" பாரி, இனியாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கார். எங்களுக்கும் அதில் முழு சம்மதம்" என்றார் சேதுராமன் திடமாக.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் சத்யா. இது எப்பொழுது நிகழ்ந்தது? இந்த விஷயத்தைப் பற்றி தன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூட தனது பெற்றோருக்கு தோன்றவில்லையா? அவர்கள் அவன் மீது அந்த அளவிற்கா நம்பிக்கை இழந்துவிட்டார்கள்? அவனால் இப்போது என்ன செய்ய போகிறான்? அவன் மிகவும் ஏமாற்றம் அடைந்தான். சிறிது நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று அவன் நம்பியிருந்தான். ஆனால், அவன் எதிர்பாராத விதமாக, விரைவாக... வெகு விரைவாக அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது. அதுவும் அவனுடைய கவனத்திற்கு வராமலேயே.

அவன் இனியா வருவதை கவனித்தான். அவள் முகத்தில், ஏதோ ஒரு மாற்றத்தை அவனால் உணர முடிந்தது. சேது ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள், அவர்களுக்கும் அதே உணர்வு ஏற்பட்டதால். அவர்கள் எதுவும் கேட்கும் முன், இனியா தானாகவே பேசினாள்.

" அப்பா, நான் பாரியை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன். நீங்களும் என்னுடைய முடிவை ஏத்துகணும்னு விரும்புறேன்"

அவள் பேசிய விதம் சத்யாவை வாயடைக்கச் செய்தது அவள் அவர்களுடைய சம்மதத்தை கேட்கவில்லை, மாறாக அவளுடைய முடிவை முடிவாக கூறினாள்.

சீதா, அவளை சந்தோஷமாக அனைத்துக் கொண்டாள். அவளுடைய முடிவு, சேதுராமனையும் சந்தோஷப்படுத்தியது என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. அவளை வெறித்தபடி பார்த்து கொண்டிருந்த சத்யாவின் முன் வந்து நின்றாள் இனியா. அவன், அவள் தலையில் கை வைத்து, மெலிதாய் புன்னகை புரிந்தான்.

தொடரும்...

ReplyForward


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top