87 இறுதிப் பகுதி

87 இறுதிப் பகுதி

இனியவனின் திட்டம் பலித்தது. திருமண வேலைகள் நித்திலாவை பரபரப்பாய் வைத்தது. அவள் வேறு எதையும் யோசிக்கும் மனநிலையில் இல்லை. அன்று அனைவரும் கையில் மருதாணி வரைந்து கொண்டார்கள்.

இனியவன் வழக்கம் போல் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினான். அவனுக்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள் ஆழ்வி. அப்பொழுது அவள் கையில் இருந்த மருதாணியை கவனித்தான் இனியவன். அவள் கையில் அவன் பெயரை வரைந்திருந்தாள்.

"என் பேர் பார்க்க இவ்வளவு அழகா இருக்கும்னு எனக்கு தெரியாது." என்ற அவன், அவளை தன் அருகில் அமர வைத்து,

"இந்த கல்யாண ஏற்பாட்டை எல்லாம் பார்க்கும்போது, நம்ம கல்யாணம் இப்படி நடக்கலயேன்னு உனக்கு வருத்தமா இல்லயா?" என்றான்.

"நீங்க மட்டும் என்னவாம்? உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயமே உங்களுக்கு தெரியாதே!" என்று சிரித்தாள்.

"எனக்கு சடங்கு சம்பிரதாயத்துல எல்லாம் பெருசா எந்த விருப்பமும் இல்ல. ஆனா உனக்கு இருக்கு இல்ல?"

"நம்ம கல்யாணத்தப்போ நாங்க எல்லா சடங்கையும் செஞ்சோம்."

"நெஜமாவா?" என்றான் வியப்போடு.

"ஆமாம். நான் உங்க பெயரை கூட என் கையில எழுதிக்கிட்டேன்."

"உங்க அம்மாவாவது, இல்ல, என் அக்காவாவது உன்னை எழுத சொல்லி கட்டாயப்படுத்தி இருப்பாங்க."

"என்னை யாரும் கட்டாயப்படுத்தல. எங்க வீட்டுக்கு, அக்கா ஒரு பியூட்டிசியனை அனுப்பி வச்சிருந்தாங்க. அவங்க என்னோட கைல உங்க பேரை எழுதட்டுமான்னு கேட்டாங்க. நான் எழுத சொன்னேன்."

"நீ எந்த மாதிரி பொண்ணு, ஆழ்வி? யாராவது தன் கையில ஒரு பைத்தியத்தோட பெயரை எழுத நினைப்பாங்களா?"

யோசிக்காமல் அவன் தோளில் ஒரு அடி போட்டாள் ஆழ்வி.

"நான் ஏற்கனவே உங்களை அந்த வார்த்தையை யூஸ் பண்ணாதீங்கன்னு சொன்னேன்ல?"

"நீ என்னை விட பெரிய பைத்தியம் தெரியுமா உனக்கு?"

தன் முகத்தை சுளுக்கு என்று வைத்துக் கொண்டாள் ஆழ்வி.

"பின்ன என்ன? எனக்கு என்ன நடக்குதுன்னு கூட எனக்கு தெரியாது. ஆனா நீ என் பெயரை உன் கையில் எழுதியிருக்க...!"

"என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியாது. ஆனா எனக்கு தெரியும்ல? நீங்க என் புருஷன் அப்படிங்கற உண்மையை என் மனசுல பதிய வைக்கத் தான் உங்க பெயரை நான் என் கையில எழுதிக்கிட்டேன். அதுக்காக என்னை நீங்க பைத்தியம்னு நினைச்சா, பரவாயில்ல."

"நீ எப்பெல்லாம் என்னை உயர்த்தி பேசுகிறாயோ, அப்பெல்லாம் உன் மேல எனக்கு எவ்வளவு காதல் பொங்குதுன்னு தெரியுமா?" என்று அவள் தோள்களை சுற்றி வளைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். கண்களை மூடி புன்னகைத்தாள் ஆழ்வி.

"உனக்கு என்னை கடிக்க தோணலையா?"

அவனது கீழ் உதட்டை பற்றி, அவனை திகைக்க செய்தாள் ஆழ்வி.

"உங்க உதட்டை கடிக்கணும்னு நான் நிறைய தடவை நினைச்சிருக்கேன்" என்று லேசாய் கடித்தாள்.

தான் கனவு காணவில்லை என்று புரிந்து கொள்ள முடியவில்லை அவனால். அவள் சிரித்தபடி அங்கிருந்து செல்ல நினைத்தபோது அவன் மீண்டும் அவளை பற்றி அமர வைத்து,

"அப்போ நான் கேட்டப்போ நீ ஏன் என்னை கடிக்கல?" என்றான்.

"நீங்க என்னை இப்படியா கடிக்க சொன்னீங்க?"

இனியவன் தன் உதடு மடித்து புருவம் உயர்த்தினான். சிரித்தபடி  அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அவனை புன்னகைக்க செய்து.
..........

குரு மற்றும் பார்கவியின் திருமணம் இனிதே நடைபெற்றது.

தன் கையில் இருந்த ஒரு உறையை பார்கவியிடம் கொடுத்தான் இனியவன்.

"விஷ் யூ ஹேப்பி மேரீட் லைஃப்."

"இது என்ன அண்ணா?" என்றபடி ஆவலாய் அதை பிரித்துப் பார்த்தாள் பார்கவி.

அதில் ஒரு வீட்டு பத்திரம் இருந்ததை பார்த்து பார்கவி வருத்தம் அடைந்தாள். அவளை விட அதிக வருத்தம் அடைந்தான் குரு.

"இதெல்லாம் என்ன இனியா?" என்றான் வேதனையோடு.

நித்திலா தன்னுடன் தன் வீட்டில் இருப்பதைப் போல, அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டாம் என்று எண்ணி, அவன் அவ்வாறு செய்வதாய் அவர்கள் நினைத்தார்கள்.

"தேவையில்லாம ரொம்ப யோசிக்காதீங்க. குருவுக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் ஆகும் போது அவளுக்கும் ஏதாவது ஒரு சொத்து கொடுக்கணும்னு அவன் நினைக்கலாம். அவனுக்குன்னு ஒரு வீடு இருந்துச்சுன்னா, அதை செய்ய அவனுக்கு உதவியாயிருக்கும். அதுக்காகத்தான் இதை கொடுத்தேன்."

"தேங்க்யூ அண்ணா." என்று அவனை மகிழ்ச்சியோடு அணைத்துக் கொண்டாள் பார்கவி.

பார்கவியை, குருவின் வீட்டிற்கு கண்ணீரும் கம்பளையுமாய் அனைவரும் வழி அனுப்பி வைத்தார்கள். அது இனியவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

இரவு

இனியவனின் கன்னத்தை கடித்தாள் ஆழ்வி.

"யாரோ நல்ல மூடுல இருக்கிற மாதிரி தெரியுது?" என்று சிரித்தான் இனியவன்.

"நீங்க குரு அண்ணா மேல வச்சிருக்கற நம்பிக்கையை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு."

"உண்மையை சொல்லணும்னா நம்பிக்கை அப்படிங்கிற அந்த வார்த்தைக்குள்ள மாட்டிக்க நான் விரும்பல."

"என்ன சொல்றீங்க?"

"யாரையுமே நம்புறது அவசியம்னு எனக்கு தோணல. அப்படி நம்ப ஆரம்பிச்சுட்டா, அவங்க மேல நமக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுடுது. எதிர்பார்ப்பு இல்லன்னா, ஏமாற்றமும் இல்ல. சரி தானே?" என்றான் தான் அணிந்திருந்த கோட்டை கழட்டியபடி.

"அப்படின்னா என்னை கூட நீங்க நம்ப மாட்டீங்களா?" என்று ஆழ்வி கேட்க, தன் கோட்டை வீசி எரிந்து விட்டு வேக நடை நடந்து அவளை நோக்கி வந்த அவன், அவள் தோள்களைப் பற்றி,

"ஆழ்வி, நான் பேசுறது என்னை சுத்தி இருக்கிறவங்களை பத்தி. அதுல நீ சேர மாட்ட"

"நான் உங்களை சுத்தி இல்லயா?"

"நீ எனக்குள்ள இருக்க." என்று தன் இதயத்தை தொட்டு காட்டினான்.

உணர்ச்சிவசப்பட்ட ஆழ்வி, அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை தழுவிக் கொண்டான்.

"நான் உங்களை ஏமாத்த மாட்டேனா?"

"மாட்ட..." என்று மேலும் அவளை இறுக்கிக் கொண்டான்.

புன்னகையோடு அவன் நெஞ்சில் சாய்ந்தாள் ஆழ்வி.

ஆறு மாதங்களுக்கு பிறகு,

நித்திலாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குடும்பத்தினர் அனைவரும் குழந்தையை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள். மகிழ்ச்சியோடு குழந்தையை தன் கையில் பெற்றுக் கொண்டாள் ஆழ்வி. குழந்தையை இனியவனிடம் ஆழ்வி கொடுக்க,

"வேண்டாம்" என்றான் அதை தன் கையில் வாங்க பயந்த இனியவன்.

"ஏன் வாங்க மாட்டேங்கறீங்க?"

"நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்"

"நம்ம குழந்தைக்கும் இதைத்தான் சொல்லுவீங்களா?" என்றாள் ரகசியமாக.

அதைக் கேட்டு சிரித்த இனியவனின் புன்னகை காணாமல் போனது, ஆழ்வி மயங்கி விழுவதை பார்த்து.

"ஆழ்வி, உனக்கு என்ன ஆச்சு?"

அவள் கையில் இருந்த குழந்தையை பெற்றுக் கொண்டார் பாட்டி.

அப்பொழுது அந்தப் பக்கம் சென்று ஒரு மருத்துவர்,

"ஏதாவது பிரச்சனையா?" என்றார்.

"அவ மயங்கி விழுந்துட்டா" என்றான் இனியவன்.

அவளது நாடியை பரிசோதித்த மருத்துவர்,

"அவங்க பிரக்னண்டா இருக்காங்க." என்றார்.

அது இனியவனை பேச்சு இழக்கச் செய்தது.

"நீ குழந்தையை தூக்கித்தான் ஆகணும், இனியா." என்று சிரித்தான் குரு.

ஆழ்வியை பார்த்து புன்னகைத்த இனியவன்,

"இப்போ தான் நம்ம குழந்தையை பத்தி பேசின. அதுக்குள்ள அவன் வந்துட்டான்" என்றான்.

சில மாதங்களுக்கு பிறகு...

பிரசவ அறையின் வெளியே இனியவன் குடும்பத்தினர் காத்திருந்தார்கள். நித்திலாவும் கூட தன் எட்டு மாத கைக்குழந்தையுடன் அங்கு இருந்தாள். ஆனால் இனியவன் மட்டும் அங்கு இல்லை. அவன் எங்கு சென்றான்? ஆழ்வியை இந்த நிலையில் விட்டு செல்ல அவனுக்கு எப்படி மனம் வந்தது? இனியவனாவது, ஆழ்வியை விட்டு செல்வதாவது...!

அவன் பிரசவ அறையில் ஆழ்வியுடன் தான் இருந்தான். கடுமையான வலியில் துடித்துக் கொண்டிருந்த அவளது கரத்தை பற்றிக்கொண்டு அவள் பக்கத்தில் நின்றிருந்தான். அன்று போல் என்றும் அவன் இயலாமையை உணர்ந்ததில்லை. ஆழ்விக்கு ஏற்பட்ட அந்த கொலைகார வலி, அவனை கொன்றது.

அவள் குழந்தையை பிரசவித்த பிறகு தான் அவனால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது. அதற்கு பின் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்காக, அவனை வெளியில் செல்லுமாறு மருத்துவர் குழு கேட்டுக் கொண்டது. வெளியில் வந்த இனியவன், அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தான். அவனது அந்த நிலைக்கான காரணத்தை பெண்கள் புரிந்து கொண்டார்கள். ஆனால் குரு அவனைப் பார்த்து பதற்றம் அடைந்தான். இனியவனின் சிவந்திருந்த கண்கள் அவனுக்கு பதற்றத்தை தந்தது.

"என்ன ஆச்சு, இனியா? ஆழ்வி நல்லா இருக்காங்க இல்ல?" என்றான்.

"அவ நல்லா இருக்கான்னு சொல்றதா வேண்டாமான்னு எனக்கு தெரியல."

"நீ என்ன சொல்ற?"

"அவ மறுபிறவி எடுத்திருக்கா. இப்படிப்பட்ட ஒரு கொடுமையான வலியை கடந்து வந்த பிறகு அவ நல்லா இருக்கான்னு என்னால எப்படி சொல்ல முடியும்? அது ரொம்ப பெரிய சித்திரவதை...!"

"ஆனா எல்லா பெண்களுமே அவங்க வாழ்க்கையில இந்த கட்டத்தை கடந்து தானே வராங்க?"

"எல்லாரும் கடந்து வராங்க அப்படிங்கிறதுக்காக அது சுலபம்னு அர்த்தம் இல்ல. நீயோ நானோ இதை தாங்குவோம்னு என்னால நிச்சயமா சொல்ல முடியல..."

"ரிலாக்ஸ், இனியா...!"

"டெலிவரி நேரத்தில, ஹஸ்பெண்ட் வைஃப் கூட தான் இருக்கணும்னு கவர்மெண்ட் ஒரு ஆர்டர் போடணும். அது குடும்பத்துல ஏற்படுற பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும். தன் மனைவி படுற வேதனையை பார்த்ததுக்கு பிறகு அவளை ஏமாத்தணும் அப்படிங்கிற எண்ணம் எந்த புருஷனுக்கும் தோணாது. குறைந்தபட்சம், அந்த அளவாவது குறையும்..."

குருவுக்கு என்ன கூறுவது என்று புரியவில்லை. அவன் இனியவனை இதுபோன்று எப்பொழுதும் பலவீனமாய் பார்த்ததில்லை. ஆழ்வி பட்ட துயரம் எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள அதுவே அவனுக்கு போதுமானதாய் இருந்தது.

அப்பொழுது குழந்தையை அவர்களிடம் கொண்டு வந்தார் ஒரு செவிலி. எதைப் பற்றியும் யோசிக்காமல் குழந்தையின் தன் கையில் பெற்றுக் கொண்டான் இனியவன், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி.

"எந்த ஒரு சாக்கும் சொல்லாம ஆம்பளைங்க தங்களுடைய கடமையை செய்யணும். ஏன்னா, குழந்தையை வளர்க்கிறதுல அவங்களுக்கும் சமமான பங்கு இருக்கு." என்றான் குழந்தையை முத்தமிட்ட இனியவன்.

ஆழ்வியை சந்திப்பதற்காக தவிப்போடு காத்திருந்தான் இனியவன், ஏதோ அவளை பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது என்பது போல. அவள் பிரசவ அறையில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டவுடன், அவளை நோக்கி ஓடிச் சென்று அவளை தழுவிக் கொண்டான்.

"ஐ அம் சாரி. நான் உன்னை ஆரம்பத்தில் இருந்தே ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்."

அவன் தோளில் சாய்ந்தபடி பலவீனமாய் புன்னகைத்தாள் ஆழ்வி.

"இனியவன் பாலகுமாரனுக்கு என்ன ஆச்சு?"

ஒன்றும் கூறாமல் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

"நீங்க அவனை பார்த்தீங்களா?" என்றாள் தொட்டிலில் இருந்த குழந்தையை பார்த்தபடி.

அவனை தன் கையில் தூக்கி, அவளுக்கு ஆச்சரியம் அளித்தான் இனியவன்.

"நீங்க அவனை தூக்கிட்டீங்களா?"

"ஏற்கனவே ஒரு தடவை தூக்கிட்டேன். இது இரண்டாவது தடவை"

ஆழ்வி அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

"இவன் ரொம்ப அழகா இருக்கான், உன்னை மாதிரியே."

"அவன் உங்களை மாதிரி இருக்கணும்." என்றாள் ஆழ்வி.

"அப்படின்னா அவன் உன்னை மாதிரி ஒரு பொண்ணை தேடுவான். அப்புறம் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ஏன்னா, உன்னை மாதிரி யாரும் இல்ல."

"நீங்க ஓவர் எமோஷனலா இருக்கிறதா ஏன் எனக்கு தோணுது?"

குழந்தையை அவள் மடியில் கிடத்திவிட்டு, அவள் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

"இவ்வளவு பலவீனமா இருக்காதீங்க. உங்களை இப்படி பார்க்கும் போது எனக்கு உங்களை கடிக்க தோணுது." என்று சிரித்தாள் ஆழ்வி.

அவளிடம் தன் உதட்டைக் காட்டி கடித்துக் கொள் என்பதுபோல் சைகை செய்தான். அவன் முகத்தை கையில் ஏந்தி, அவன் இதழில் முத்தமிட்டு, அவனை புன்னகைக்க செய்தாள் ஆழ்வி.

முற்றும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top