ஓர் இனிய பதிவு

#கணவன்_மனைவி
#இல்லறத்தை #நடத்தவேண்டிய #முறைபற்றிய_ஓர்இனியபதிவு. ♥

♥சிற்றூர் ஒன்றில்,  ஒரு கணவனும்
அவன் மனைவியும்  ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். என்றாலும் வறுமை அவர்களை வாட்டி வறுத்தியது.  ஒரு நாள் அந்த மனைவி,  தன் கணவனைப் பார்த்து,

♥"வீட்டில்உள்ள காளைமாட்டைக் கொண்டுபோய்ச் சந்தையில் விற்று,
அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால், குடும்பத்தை நகர்த்தலாமே"  என்று யோசனை கூறினாள்.

♥அவனும் அதற்கு உடன்பட்டு, 
மாட்டை ஓட்டிக்கொண்டு  சந்தைக்குச் செல்லும்  சாலையில் நடந்து சென்றான்.
வழியில் மாடு  அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.  அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன் அவனைப் பார்த்து, 

♥"ஏனய்யா,   அந்த முரட்டுக்காளையுடன் சிரமப்படுகிறாய்!  என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக
என் ஆட்டை உனக்குத்  தருகிறேன்" 
என்றான்.

♥அறிவில் குறைந்த  அந்தக் கணவனும்
மறுப்பேதும் சொல்லாமல்  மாட்டைக் கொடுத்துவிட்டு  ஆட்டை ஓட்டிக்கொண்டு  சந்தையை நோக்கிச் சென்றான்.

♥எதிரேயொருவன்  கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி,
"கோழியென்றால் கையிலேயே தூக்கிக்கொண்டு போய்விடலாம்"

♥என்று ஆசை காட்டியதும்,  அதற்கும் அந்த  அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு,  ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக்  கோழியை வாங்கிக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.

♥போகும்வழியில் ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன்  அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு
அறிவிலிக் கணவனிடம்  நயமாகப் பேசி,
ஒரு குவளைத் தேநீருக்குக்  கோழியை வாங்கிக்கொண்டான்.

♥அறிவிலிக் கணவன்  தேநீரைக் குடிக்கும்போது,  அவன் வீட்டுக்குப்
பக்கத்து வீட்டுக்காரன்  அவனைப் பார்த்து, ''அட முட்டாளே!
நானும் உன்னைக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். 

♥மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய்;  ஆட்டைக் கொடுத்துக்  கோழியை வாங்கினாய்;  கோழியைக் கொடுத்துத்  தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய் -இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;  அல்லது உன்னை  அடித்துத் துரத்திவிடுவாள்'' என்றான். அதற்கு  அந்த அறிவிலிக் கணவன்,

♥"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது; என் மனைவியை  நான் நன்கு அறிவேன்"
என்றான்.

♥தான் சொல்வதுதான் நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன்.  நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் வேறு  கட்டிக்கொண்டனர்.

♥நடந்தால் அறிவிலிக் கணவன்  தனது வீட்டைப்  பக்கத்து வீட்டுக்காரனுக்கு
எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால்  பக்கத்து வீட்டுக்காரன்,
தனது பெட்டிக்கடையை  அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும்.

♥இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிற்குத் திரும்பினர்.

♥அண்டை வீட்டுக்காரன்,  அறிவிலியின் மனைவியிடம்  அவளது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களை யெல்லாம் சொல்லி,

♥" உன் கணவன் மாட்டோடு சென்று
ஒரு கோப்பைத் தேநீர் அருந்திய நிறைவோடு  திரும்பியிருக்கிறான்" 
என்று கேலி செய்தான்.

♥அறிவிலியின் மனைவியோ தன் கணவனைப் பார்த்து,
"அந்தத் தேநீரையாவது மனநிறைவுடன்  அருந்தினீர்களா?''
என்று அன்பொழுகக் கேட்டாள்.

♥பக்கத்து வீட்டுக்காரனுக்கு
ஒரே அதிர்ச்சி.  பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக்கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.

♥மறுநாள்  அந்த அறிவிலிக் கணவனைப் பார்த்து அவன்,  ''என்னடா உன் மனைவி உன்னைவிட முட்டாளாக இருக்கிறாளே?" என்று கேட்டான்.

♥"அப்படியொன்றுமில்லை. என்னதான் அவளுக்கு  என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும்  அதை மூன்றாவது நபரின் முன்னால்  காட்டிக்கொள்ளமாட்டாள்.  நானும் அப்படித்தான் நடந்து கொள்வேன். அந்தத் துணிவில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்''  என்றான் அந்த அறிவிலிக் கணவன்.

♥♥கணவன், மனைவி இருவரும் ஒருவர் வினையை மற்றொருவர் உடனிருந்து தூய்மை செய்து வாழ்வதே இல்லறம்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top