26 கொண்டாட்டம்
26 கொண்டாட்டம்
பூவனம்
எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை தினேஷுக்கு. நேற்று கோவிலில் நடந்ததை பற்றி தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அவளது தம்பியைப் பற்றி கூறினால், நர்மதா நம்புவாளா என்று அவனுக்கு தெரியவில்லை. அவள் நம்பாமல் போனாலும் அது தவறில்லை. ஏனென்றால், ஸ்ரீராம் அப்படிப்பட்டவன் தான். பெண்களைப் பற்றியெல்லாம் நினைக்க அவனுக்கு நேரமுமில்லை, அவனுக்கு அதில் விருப்பமும் இல்லை. ஆனால், அவன் மிதிலாவிடம் நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும் போது அப்படி தோன்றவில்லை. ஸ்ரீராம், வேண்டுமென்றே தான் மிதிலாவுக்கு தண்ணீரை புகட்டினான் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதைப் பற்றி நர்மதாவிடம் கூறத்தான் வேண்டும்.
அவன் தோளை யாரோ தொட, திடுக்கிட்டு திரும்பினான் தினேஷ்.
"நான் தான்" என்றாள் நர்மதா.
"நீயா நர்மதா?"
"என்ன தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?"
"நீ என்ன நினைப்ப... எப்படி எடுத்துக்குவேன்னு தெரியல..."
"நீங்க என்ன சொல்றீங்க?"
"நேத்து கோவில்ல என்ன நடந்ததுன்னு தெரியுமா?"
"என்ன?" என்றாள் சாதாரணமாக.
"ராமு, மிதிலாவை தண்ணி குடிக்க வெச்சார்..."
"என்ன்ன்ன்னது....?" என்று அதிர்ந்தாள்.
ஆமாம் என்று தலையசைத்தான் தினேஷ்.
நர்மதாவுக்கு திக்கென்றது. ஸ்ரீராம், மிதிலாவை தண்ணீர் குடிக்க செய்தானா? மிதிலா விரதமிருந்த விஷயம் தெரியாமல் செய்தானா, அல்லது தெரிந்தே செய்தானா...? தெரியாவிட்டாலும் அவன் எப்படி அதைச் செய்வான்? அவனுக்கு தான் இந்த விரதத்தை பற்றி நன்றாக தெரியுமே...! அதனால் தானே, நர்மதா வெகுநேரம் பசியோடு இருக்கக்கூடாது என்று, தினேஷ் வருவதற்கு முன்பு, காலம் தாழ்த்தாமல், அவனாகவே அவளை கோவிலுக்கு அழைத்து வந்து விரதத்தை முடிக்கச் செய்தான்...!
"ராமு, மிதிலாவுக்கு தண்ணி கொடுக்க முயற்சி பண்ணாரு. அப்போ ஒரு பொண்ணு, அவங்களோட ஹஸ்பன்ட், இல்லன்னா, உட்பி மட்டும் தான் தண்ணி கொடுக்கணும்னு சொன்னா..."
"அப்புறம் என்ன ஆச்சு?" என்றாள் ஆவலாக.
"அதை கேட்டதுக்கு அப்புறமும், அவரு மிதிலாவுக்கு தண்ணி கொடுத்தாரு"
"அந்தப் பொண்ணு சொன்னதை அவன் சரியா கேட்டானா?" என்ற நர்மதாவை பார்த்துப் புன்னகை புரிந்தான் தினேஷ்.
"நான் அதுக்கு சொல்லலங்க..."
"எனக்கு தெரியும். கண்ணால பார்த்த என்னாலேயே நம்ப முடியலையே...! ராமு, மிதிலாவை விரும்புறார்னு நினைக்கிறேன்"
"நானும் அப்படித் தான் நினைக்கிறேன்" என்று குட்டை உடைத்தாள் நர்மதா.
"நீ ஏன் அப்படி நினைக்கிற?"
தனக்கு தெரிந்தவற்றை அவனிடம் கூறினாள் நர்மதா.
"அப்ப பிரச்சனை முடிஞ்சிது. நம்ம மிதிலா வீட்ல பேசலாம்"
"முடியாது"
"ஏன்?"
"மிதிலாவுக்கு ராமு மேல விரும்பமில்ல. அவங்களுக்கு ராமுவை பிடிக்காது"
"அவங்களுக்குள்ள நடந்த முந்தைய பிரச்சனையாலயா?"
"ஆமாம். அவனுடைய மரியாதையை அவனே கெடுத்துக்கிட்டான்" என்றாள் சோகமாக.
"அப்படின்னா என்ன நடக்கும்?"
"எனக்கு தெரியல..."
"உண்மையிலேயே உனக்கு தெரியாதா?"
"எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. எனக்கு ராமுவை பத்தி நல்லா தெரியும். அவன், தனக்கு ஏதாவது வேணும்னு நினைச்சா, அது அவனுக்கு வேணும் தான். அப்படி அது கிடைக்கலன்னா தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்துடுவான். எதைப் பத்தியுமே கவலை பட மாட்டான்"
"ஆனா, மிதிலா ரொம்ப புத்திசாலி பொண்ணு..."
"அதுக்காக அவங்க காயப் படலாமா?"
"ராமு அவளை காயப்படுத்த மாட்டார்"
"அவங்க, ராமுவை வேண்டாம்னு உதறி தள்ளினா, அவன் நிச்சயம் அவங்களை காயப்படுத்துவான்..."
"அவங்க உதறி தள்ளினதை நான் நேத்து பாத்தேன்"
"என்ன சொல்றீங்க?"
"ராமு தான் தன்னுடைய முகத்தில் தண்ணீர் தெளிச்சி மயக்கத்தை தெளிய வச்சாருன்னு தெரிஞ்ச பிறகும் கூட, *நீங்க எனக்கு தண்ணி கொடுத்தீங்களான்னு?* அவங்க ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்ல. அதைப் பத்தி ராமுகிட்ட கேட்காம, ஒதுக்கித் தள்ளிட்டு அங்கிருந்து போயிட்டாங்க. அவங்க அதுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கல"
பெருமூச்சு விட்டாள் நர்மதா.
"அப்படி செய்ய ரொம்ப ஸ்ட்ராங்கான ஆட்டிட்யூட் வேணும். அவங்க விரதம் இருந்தாங்க. ராமு அவங்களுடைய விரதத்தை முடிச்சாரு. ஆனா, அது தனக்கு தெரியாத மாதிரி நடந்துகிட்டாங்க."
"ராமுவுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாதுன்னு, அவங்க வேணுமின்னே அப்படி செஞ்சாங்கன்னு சொல்றீங்களா?"
ஆமாம் என்று தலையசைத்தான் தினேஷ். நர்மதாவின் கண்கள் குளமாயின.
"கவலைப்படாத நர்மதா. இன்னும் எதுவும் நடந்துடல... மச்சானை குறைச்சு எடை போடாதே..."
"அவனை நான் குறைச்சு எடை போடல. அதனால தான் எனக்கு பயமாயிருக்கு"
"என்ன நடக்குதுன்னு பாக்கலாம்... "
எஸ் ஆர் ஃபேஷன்ஸ்
அலுவலகம் முழுவதும் மதிலாவின் பெயர் தான் உச்சரிக்கப்பட்டு கொண்டிருந்தது. மாலினி, ஸ்ரீராமின் மீது கொண்டிருந்த விருப்பத்தை பற்றி கிட்டத்தட்ட அனைவருக்குமே தெரிந்து தான் இருந்தது. முன்பு அதைப் பற்றி பேசாதவர்கள் கூட, இப்பொழுது வெளிப்படையாய் பேசினார்கள். அவர்கள் பேசியவற்றில் சில, மிதிலாவின் காதிலும் விழுந்தது. மிதிலாவின் புதிய தோழி சௌமியா, அதை மிதிலாவிடமே நேரடியாக பேசினாள். மிதிலாவின் அறைக்கு வந்தவள், மிதிலாவுடன் கை குலுக்கினாள்.
"கலக்கிட்டீங்க மிதிலா... எல்லாரும் உங்களை பத்தி தான் பேசிகிட்டு இருக்காங்க"
"நான் என்னோட டியூட்டியை தான் செஞ்சேன்"
"நீங்க மாலினி கதையை முடிச்சி ரொம்ப நல்ல வேலை செஞ்சீங்க..."
"அவங்களே தான், அவங்களுடைய வாழ்க்கையை கெடுத்துக்கிட்டாங்க"
"அவ அப்படி தான். எது எப்படி இருந்தாலும், ஒரு நாள் நிச்சயம் எதையாவது பைத்தியக்காரத்தனமா செஞ்சி, அவ தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துகிட்டு இருப்பா. அது ஒரு திருந்தாத ஜென்மம். எஸ்ஆர்கே ரூமுக்கு போக, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கிட்டே இருப்பா. எஸ்ஆர்கே எங்க...? இவ எங்க...? எல்லாதுக்கும் ஒரு எல்லை இருக்கு இல்லையா...? அவ ஒரு பேராசைகாரி. தகுதிக்கு மீறி, எப்படி ஒருத்தி இப்படி ஆசைப்பட்டாளோ எனக்கு புரியல...! அவ ஒரு சாதாரண எம்ப்ளாயி. ஆனா, அவளுக்கு லைஃப் பார்ட்னரா, அவளுடைய பாஸ் கேக்குது... ஹவ் பேத்தட்டிக்...!"
"நீங்க சொல்றது சரி தான். அவங்க லிமிட்டில் இருந்திருக்கணும்..."
"நீங்க இந்த ஆஃபீஸ்ல சேருறதுக்கு முன்னாடி, ஏதாவது நொண்டி சாக்கை வச்சிகிட்டு, ஒரு மணி நேரத்திற்கு ரெண்டு தடவையாவது எஸ்ஆர்கே கேபினுக்கு போயி எஸ்ஆர்கேவை கடுப்படிப்பா..."
"ஆமாம். ஜூனியருக்கு பொண்ணுங்களை பிடிக்காதுன்னு கேள்விப்பட்டேன்"
"உண்மை தான் மிதிலா. உங்ககிட்ட மட்டும் தான் அவரு வெறுப்பை காட்டாம இருக்காரு"
ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தாள் மிதிலா. அவளுக்கு தானே தெரியும், அவன் ஏன் அவளை உடன் வைத்திருக்கிறான் என்று...! அவன் யார் என்று அவள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றல்லவா அவன், அவளை உடன் வைத்திருக்கிறான். அதை நினைத்து பெருமூச்சு விட்டாள் மிதிலா.
"ஓகே சௌமியா. நம்மோட அடுத்த ப்ராஜக்ட் டீடெய்ல்ஸை குகன்கிட்ட கொடுக்கனும். நான் வரேன்..."
"ஓகே, ஓகே... யூ கேரி ஆன். நீங்க எஸ்ஆர்கே பிஏவாச்சே... ரொம்ப பிசியான ஆளு... என்னை மாதிரி இல்ல..."
அங்கிருந்து புன்னகையுடன் குகனின் அறையை நோக்கி சென்றாள் மிதிலா. ஆனால், அவன் அங்கு இல்லை. ஸ்ரீராமின் அறையில் இருந்தான்.
ஸ்ரீராமின் அறை
"சோ, உனக்கும் மிதிலாவுடைய பிளான் முன்னாடியே தெரியும் இல்லையா?" என்றான் ஸ்ரீராம்.
"டெண்டர் அமௌவுன்டை மாத்தின பிறகு தான், அவங்க என்கிட்டயே சொன்னாங்க. அது கூட, வீட்டுக்கு போனதுக்குப் பிறகு, ஃபோன் பண்ணி, முந்தைய அமௌன்ட்டைவிட பத்து கோடியை குறைச்சி கோட் பண்ணதா சொன்னாங்க"
"நீ ஏன் அதை பத்தி என்கிட்ட சொல்லல?"
"நீ கோபப்பட்டு, மாலினியை அன்னைக்கே அரஸ்ட் பண்ண வச்சிருப்ப..."
"அதனால?"
"அதனால தான், உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு மிதிலா சொன்னாங்க. அப்போ தானே வேலாயுதத்தையும் சேர்த்து அரஸ்ட் பண்ண முடியும்?"
ஸ்ரீராமின் தலையில் அலாரம் அடித்தது.
"என்ன சொன்ன? எதுக்காக வேலாயுதத்தையும் சேர்த்து அரஸ்ட் பண்ணனும்னு மிதிலா நினைச்சாங்க?"
"நான் அவங்ககிட்ட வேலாயுதத்தை பத்தி சொல்லியிருந்தேன்"
அப்படி என்றால், *நான், என் கடமையை தான் செய்தேன்* என்று அவள் கூறியது உண்மையல்ல. தனக்கும் வேலாயுதத்திற்கும் இருந்த பழைய கதையை மனதில் வைத்து தான் இதை மிதிலா செய்திருக்கிறாள். அப்படியென்றால், இது கடமைக்கு அப்பாற்பட்டது தானே?
"வேலாயுதமும் சீக்கிரம் அரெஸ்ட் ஆவாரு"
சரி என்று தலையசைத்தான் ஸ்ரீராம்.
"நான் போகலாமா?"
"மிதிலாவை அனுப்பு"
அவனை பொருள் பொதிந்த பார்வை பார்த்து சென்றான் குகன்.
ஸ்ரீராமுக்கு வேலாயுதம் இழைத்த அநீதி தெரிந்து தான் வேலாயுதமும் கைது செய்யப்பட வேண்டும் என்று மிதிலா நினைத்திருக்கிறாள். அது அவன் மனதுக்கு இதமாய் இருந்தது. அவள், மாலினியிடம் காதலுக்கு அளித்த விளக்கத்தை பற்றி நினைக்காமல் அவனால் இருக்க முடியவில்லை. மிதிலாவுக்கு அவன் மீது விருப்பம் இல்லை என்று தெரிந்த பிறகும்...!
யுவராஜ் கூறியது உண்மை தான். *மிதிலா எல்லா இடத்திலும் கண் வைத்திருக்கிறாள்* நல்லவேளை அவளது பார்வை எல்லாவற்றின் மீதும் இருந்தது. இல்லாவிட்டால், ஒரு மோசமான பெண்ணின் நரிதனத்திடம் அவன் தோற்றிருப்பான். அப்பொழுது யுவராஜை நினைத்து அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது. ஏனென்று தெரியவில்லை, யுவராஜை பற்றி நினைக்கும் போதெல்லாம் அவனுக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது.
அவனது அறைக்கு மிதிலா வந்த போது, ஸ்ரீராமின் அறையின் கதவு திறந்திருந்தது. அவள், அவனது அறையில் வைத்த செடிகளின் அருகில் நின்று, அவற்றை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். அவளைப் பார்த்து, *உள்ளே வா* என்பது போல் தலையசைத்தான்.
"நீங்க வர சொன்னிங்கன்னு குகன் சொன்னாரு"
"உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்ன்னு நினைச்சேன்"
"நான் என்..."
அவளது பேச்சை துண்டித்த ஸ்ரீராம்,
"அது உங்க கடமையாவே இருந்தாலும், உங்களுக்கு நான் நன்றி சொல்லணும்"
அமைதியாய் இருந்தாள் மிதிலா.
"இந்த டெண்டர் எனக்கு எவ்வளவு முக்கியமானதுன்னு உங்களுக்கு தெரியாது"
*எனக்குத் தெரியும்* என்று மிதிலா சொல்கிறாளா என்று பார்க்க நினைத்தான் அவன். ஆனால், அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்கு ஏதும் தெரியாது என்பதைப் போல் அமைதியாய் நின்றாள்.
"நான் உங்களுக்கு ஏதாவது கொடுக்கணும்னு நினைக்கிறேன்..."
அவசரமாய் அவனைக் தடுத்தாள் மிதிலா.
"இல்ல சார். எனக்கு எதுவும் வேண்டாம். உங்ககிட்ட எதையும் எதிர்பார்த்து நான் இதை செய்யல"
"எனக்கு தெரியும்"
"சார், தயவு செய்து என்னை சங்கடப்படுத்தாதிங்க. நான் உங்க ஆஃபீஸ்ல வேலை செய்கிற ஒரு சாதாரண எம்ப்ளாயி. அதுக்கான சம்பளத்தை வாங்கிக்கிட்டு தான் நான் வேலை செய்யறேன். நான் என்ன செய்யணுமோ அதை தான் செஞ்சேன். அதுக்காக நீங்க எனக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்ல... எக்ஸ்க்யூஸ் மீ..." விறுவிறுவென அங்கிருந்து சென்றாள்.
இது ஸ்ரீராம் எதிர்பார்த்தது தான் என்றாலும், அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன்னை யாரும் மறுத்தளிப்பதை பொறுக்காதவன் அவன். அவள் இப்படித் தான் செய்வாள் என்பதற்காக அவள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தான் நினைத்ததை எப்படி சாதிப்பது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
தனது அறையை நோக்கி, குகன் ஓடி வருவதைப் பார்த்தான் ஸ்ரீராம். கதவை தட்டாமல் உள்ளே நுழைந்தான் குகன்.
"எஸ் ஆர் கே..."
"வேலாயுதத்தை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க சரி தானே...?" என்றான் ஸ்ரீராம்.
ஆமாம் என்று பெருமூச்சு விட்டான் குகன்.
"அவர் தனக்கு லஞ்சம் கொடுத்ததா மாலினி போலீஸ்ல சொல்லிட்டா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போலீஸ் அவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க"
"இதை கொண்டாடினா என்ன?"
குகனுக்கு வார்த்தைகள் வரவில்லை. ஸ்ரீராமா கொண்டாட்டத்தை பற்றி பேசுவது? அவனுக்கு கூட்டமும், கொண்டாட்டங்களும், அறவே பிடிக்காதவை. என்ன ஆனது ஸ்ரீராமுக்கு?
"நீ என்ன சொன்னே?" என்றான் குகன். தான் கேட்டது சரி தானா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள.
"நான் இந்த சக்சஸ்ஸை கொண்டாடும்னு நினைக்கிறேன்"
"ஆனா, நீ தான் குடிக்க மாட்டியே..." என்ற குகனை பார்த்து முறைத்தான் ஸ்ரீராம். அவனுக்கு தன் பல்லை காட்டி சிரித்தான் குகன்.
"நம்ம ஆஃபீஸ்ல ஸ்டாஃப் எல்லாருக்கும் ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணு"
அது மேலும் குகனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. எப்போதிலிருந்து, ஸ்ரீராம் தன் சந்தோஷத்தை, தன்னிடம் வேலை செய்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் துவங்கினான்?
"பார்டியா? நெஜமா தான் சொல்றியா?"
"எதுக்காக இப்ப எல்லாம் நீ என்னை நிறைய கேள்வி கேட்கிற?"
"ஏன்னா, நீ உன்னை மாதிரியே நடந்துக்க மாட்டேங்குறியே..."
"வாயை மூடிக்கிட்டு சொன்னதை செய்"
"சரி செஞ்சுடுறேன். பார்ட்டி எப்போ?"
"நாளைக்கு சாயங்காலம். ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே எல்லாரையும் வேலையை முடிச்சுக்க சொல்லு..."
"சரி சொல்லிடறேன்"
"எல்லாருக்கும் டின்னர் அரேஞ்ச் பண்ணிடு"
சரி என்று தலையசைத்தான் குகன்.
"அப்புறம், ஒரு பெரிய கேக்... "
"சுகர்லெஸ்ஸா?" என்றான் வேண்டுமென்றே.
அதைக் கேட்டு புன்னகைத்தான் ஸ்ரீராம்.
"இல்ல... தேவையில்ல..." என்றான்.
ஸ்ரீராமுக்கு தெரியாதா, மிதிலா இனிப்பு சாப்பிட தயங்க மாட்டாள் என்று. ஆனால், அந்த விஷயம் குகனுக்கும் தெரியும் என்பதை மறந்து தான் போனான் ஸ்ரீராம்.
"என்ன ஃப்ளேவர் ஆர்டர் பண்ணட்டும்?" என்றான் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு குகன்.
"மிதிலாகிட்ட கேளு" என்று ஸ்ரீராம் சொல்ல, வாயடைத்துப் போனான் குகன்.
இவ்வளவு வெளிப்படையான பதிலை அவன் ஸ்ரீராமிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு பட்டவர்த்தமாய் தெரிந்து போனது, இந்த பார்ட்டியை, ஸ்ரீராம் மிதிலாவுக்காக தான் ஏற்பாடு செய்கிறான் என்று. ஆனால், அவன் பார்ட்டியில் என்ன செய்யப் போகிறான்? மிதிலாவுடன் சேர்ந்து நடனமாட போகிறானோ...? குகனுக்கு ஆவல் அதிகரித்தது...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top