11
விஷ்ணுவர்மனை தேடி அலைந்த வீரர்கள் அந்த இடத்திலிருந்து சென்றதும் மறைவிலிருந்து வெளிவந்த விஷ்ணுவர்மன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக சிந்திக்கலானான் .
விஷ்ணுவர்மனின் கவனம் முழுவதும் அந்த மரகதலிங்கம் எங்கே உள்ளது என்பதையும் தன் மீது சுமத்தப்பட்ட பழியை எவ்விதம் போக்குவது என்பதையும் சிந்தித்தவண்ணமே இருந்தது . தன்னை அரண்மனை வீரர்கள் தேடிக்கொண்டிருப்பதால் முதலில் ஒரு பாதுகாப்பான அடைக்கலத்தினை தேடவேண்டும் என அவன் எண்ணினான் .
தான் அடைக்கலம் புக தக்க இடம் அருகில் இருக்கும் குன்றும் அடர்ந்த காடுகளும்தான் என்பதை உணர்ந்த விஷ்ணுவர்மன் அந்த கானகத்தை நோக்கி தன் பிராயாணத்தைத் துவங்கினான் . அக்காட்டில் பொதுவாகவே ஜனநடமாட்டம் என்பது கிடையாதாகையால் அங்கு இருப்பதே உசிதம் என முடிவெடுத்தான் .
மேலும் வீரர்களும் அந்தப்பக்கமாக தனது தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டதால் இனி அந்தப்பக்கம் வரமாட்டார்கள் என்றும் நினைத்தான் .
அந்தக் கானகம் ஏற்கனவே அவனுக்கு பழக்கப்பட்ட இடமாதலால் அந்தக்காட்டின் இயல்பு அவன் அறிந்த ஒன்றுதான் . வானளாவி இருந்த மரங்களும் அந்த மரங்களின் அடர்ந்தகிளைகளும் சூரிய வெளிச்சத்தின் பரிட்சையத்தையே அந்த கானகத்திற்கு கிட்டக்கூடாது என்று சங்கல்பம் எடுத்தாற்போன்று வளர்ந்திருந்தன .
அவ்வப்போது செவிப்பறையில் வந்து விழுந்த இனம்தெரியாத பட்சிகளின் ஓசையும் பூச்சிகளின் ஓசையும் சற்று அச்சுறுத்தும்படியாக இருந்தது .
அந்த கானகத்தில் தனக்கான ஒரு இடத்தினை தெரிவுசெய்து அமர்ந்து ஆழ்ந்த பெருமூச்சைவிட்டான் . தலையை நன்றாக அருகில் இருந்த மரத்தின் மீது சாய்த்துக்கொண்டு சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டான் . பிறகு எங்கிருந்து தனது துப்பறியும் வேலையை ஆரம்பிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தான் . முதலில் தனக்கு எதிராக சாட்சியளித்த கோவில் காவலனைப்பார்த்து அவனிடம் இருந்துதான் வேலையை ஆரம்பிக்கவேண்டும் என நினைத்தவன் இருள் கவிழும் நேரம் ஊருக்குள் செல்லலாம் என யோசித்தான் .
இரவு முழுக்க தூங்காமல் அலைந்ததும் மனத்தினை அழுத்தமாக்கிய பாரமும் ஒன்று சேர்ந்து அவனை உடலளவிலும் மனதளவிலும் சற்று பலவீனமாக்கியதால் உறக்கம் அவனையும் மீறி வந்தது . பொழுது சாய இன்னும் சற்று நேரம் இருந்தபடியால் அவனும் அந்த உறக்கத்தினை கட்டுப்படுத்த எத்தனிக்கவில்லை .
அந்தி சாயும் வரை உறங்கியவன் பகல் வேளைமுழுவதும் இரை தேடிவிட்டு மாலையில் தங்களது கூட்டிற்க்கு திரும்பும் பட்ஷிகள் எழுப்பிய ஒலியினால் தன் உறக்கம் களைந்து எழுந்தான் விஷ்ணுவர்மன் .
உறக்கத்திலிருந்து விழித்தவன் இப்பொழுது இங்கிருந்து கிளம்பினால் சரியாக இருட்டிவிடும் . காவல் வீரர்களின் கண்களிலிருந்தும் கூடுமானவரை தப்பித்துவிடலாம் என திட்டமிட்டான் . அதன்படியே அங்கிருந்து ஊருக்குள்ளான தனது பயணத்தை ஆரம்பித்தான் அவன் .
விஷ்ணு தனது பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இருட்டிவிட்டது . இருப்பினும் பௌர்ணமி தினமாதலால் வானில் உதிக்கின்ற திங்களொலியினால் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிச்சக் கீற்றுகள் தென்பட்டுக்கொண்டிருந்தன. அப்போது தூரத்தில் ஒரு உருவம் கையில் தீப்பந்தத்துடன் நடந்து செல்வதை கவனிக்கலானான்.
அந்த உருவம் உடல் முழுவதும் போர்வையை போர்த்தியிருந்ததால் அந்த உருவத்தை அவனால் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை . " இந்த அர்த்த ராத்திரியில் இந்த அடர்ந்த காட்டின் வழியே யார் செல்வது ? ராஜ்ஜியத்தின் சாதாரண குடியாக இருந்தால் அனைவரும் உபயோகிக்கும் பொதுவழியான ராஜபாட்டையையே உபயோகப்படுத்தி இருந்திருக்கலாமே ? இப்படி ஜனசஞ்சாரமற்ற வனாந்திரத்தில் செல்வானேன் ? ஒருவேளை ஒற்றனாக இருக்குமோ ? அப்படி இருந்துவிடக்கூடாது . " என நினைத்தான் விஷ்ணுவர்மன் .
அந்த உருவத்தின் மேலே சந்தேகம் வலுப்பட்டதன் காரணமாக அந்த உருவத்தை பின்தொடரவேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவர்மனுக்கு உண்டானது .
எனவே அந்த உருவம் தன்னைக் கவனிக்காத வண்ணம் கணிசமான இடைவெளியில் அந்த உருவத்தைப் பின்தொடர ஆரம்பித்தான் விஷ்ணுவர்மன் .
சில நிமிட நேரம் கழிந்த பிறகு குன்றின் அருகில் வந்த அந்த உருவம் திடீரென்று ஏதோ ஒரு சங்கேத ஒலியை எழுப்பியது . அந்த ஒலி எழுந்த மறுநொடியே இதற்க்கென்றே காத்திருந்தார்போல் ஒருவன் அருகில் இருந்த அந்த அகலமான குன்றின் அடிப்பரப்பின் மறைவிலிருந்து வெளிவந்தான் .
அவன் முகத்தினை மறைத்தவாறு ஒரு துணியைக்கட்டியிருந்தான் . அவன் அந்த உருவத்தின் முன்னர் தமது வணக்கத்தினை தெரிவித்து தலைவணங்கினான் . பின்னர் இருவரும் அக்குன்றின் அடிப்பரப்பில் வாயில் போல உள்ள குகையின் உள்ளே நுழைந்தனர்.
இவர்களின் செய்கையில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த விஷ்ணு . தொடர்ந்து அவர்களை கண்காணித்த வண்ணம் இருந்தான். அவர்கள் இருவரும் அக்குன்றின் குகைப்பகுதிக்கு சென்றதும் தானும் மெதுமெதுவாக அவர்களிருவரும் சென்ற அக்குன்றின் குகைக்குள் நுழைந்தான். அவர்களிருவரும் அறியா வண்ணம் அவர்களைத்தொடர்ந்தவனுக்கு அதிர்சியே மிஞ்சியது .
அந்த உருவம் தன் மீது போர்த்தியிருந்த போர்வையை விலக்கியது . அந்த போர்வையை விலக்கியதும் தெரிந்தது சாட்ஷாத் வளவனின் முகமே! இதனைக்கண்டதும் விஷ்ணுவர்மனிற்க்கு ஐயம் மேலிட்டது . " ஏன் இந்த அர்த்த ராத்திரியில் வளவன் இங்கே வந்திருக்கிறான் ? " என்ற கேள்வி எழ அமைதியாக அவர்களின் நடவடிக்கைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் விஷ்ணுவர்மன்.
பின் இருவரும் அக்குகையின் ஓரத்தில் நிலவறைபோல் காணப்பட்ட பகுதியில் கீழே இறங்க ஆயத்தமானார்கள். அவர்கள் கீழே இறங்கியவுடன் விஷ்ணுவும் ஒரு சில நிமிட இடைவெளியில் சப்தமே எழாதவாறு மிக அமைதியாக உள்ளே இறங்கினான். அந்த குகையின் நிலவறையினுள்ளே நுழைந்தவனுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டு பகீரென்றது.
அவன் இத்தனை நேரம் எதை நினைத்து மன உலைச்சலுக்கு ஆளானானோ எந்த மரகதலிங்கம் தன்னால் கடத்தப்பட்டுவிட்டது என்ற இழிசொல்லுக்கு ஆளானானோ அந்த மரகதலிங்கத் திருமேனியே அந்த நிலவறைக்குள் இருந்தது .
சட்டென்று உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று கண்காணிக்கத் துவங்கினான் விஷ்ணுவர்மன்.
"காளிங்கா … நான் கூறியதெல்லாம் உனக்கு நினைவில் இருக்கிறதா ? அனைத்தும் தெளிவாக விளங்கியதல்லவா ? இந்த மரகதலிங்கத்தினை இன்னும் சில தினங்களுக்கு பத்திரமாக யார் கண்களுக்கும் தெரியாதவாறு மிக பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.
விஷ்ணுவர்மன் வேறு சிறையிலிருந்து தப்பிவிட்டான். கண்டிப்பாக இந்த லிங்கத்தினை தேட ஆரம்பித்திருப்பான். நம் இருவருக்கு மட்டும்தான் இந்த லிங்கம் இருக்கும் இடம் தெரியும். எனவே மிக கவனமாக நம் அடுத்தகட்ட செயல்களை செய்யவேண்டும் . மேலும் வரகுணனும் இப்பொழுது போருக்கு உண்டான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறான். நாம் இரட்டிப்பு கவனத்துடன் ஜாக்கிரதையாக செயல்படும் தருணம் இது எனக் கூறினான்.
இதைக்கேட்ட மறுகனமே விஷ்ணுவர்மனிற்க்கு தூக்கிவாரிப்போட்டதுபோல் ஆனது . இவன் ஏன் இந்த இழிசெயலை செய்து என்மீது பழியைப்போடவேண்டும் ? இவனின் நோக்கம்தான் என்ன ? உடனடியாக இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என எண்ணியவன் சற்றும் தாமதியாமல் தான் கையோடு அந்த சிறையிலிருந்து கொண்டுவந்த வாளை உருவிக்கொண்டு அவர்களிடையே பாய்ந்தான் அவன் .
திடீரென தங்கள் முன் வந்து நின்ற விஷ்ணுவர்மனைப்பார்த்து சற்று திடுக்கிட்டனர் அவர்கள் இருவரும். பின் சுதாரித்துக்கொண்டு காளிங்கனிடம் கண்ணைச்சிமிட்டி சமிக்ஞை செய்தான் வளவன் . அந்த சமிக்ஞையை இனம் கண்டுகொண்ட காளிங்கன் விஷ்ணுவர்மனின் மீது பாய தயாரானான் .அவன் தன்னைத்தாக்க வருவான் என்பதை முன்னரே ஊகித்த விஷ்ணுவர்மன் தான் நின்ற இடத்திலிருந்து விலகினான் . அங்கிருந்து நகர்ந்த மறுநொடியே அவனின் வாள் காளிங்கனின் கழுத்தை பதம் பார்த்தது . இவையனைத்தும் மின்னல் வேகத்தில் ஒரே நொடிப்பொழுதில் நடந்தேறிவிட்டது .
வளவனின் புறம் திரும்பிய விஷ்ணுவர்மன் கோபம் பீறிட " வளவா ... ஏன் இப்படி செய்தாய் உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா ? எதற்காக மரகதலிங்கத்தைத் திருடி என் மீது பழியைச் சுமத்தினாய்? உன்னுடைய நோக்கம்தான் என்ன ? " என கறுவினான் .
அதைக்கேட்டதும் சிரித்த வளவன் பிறகு கண்களில் தோன்றிய வஞ்சத்துடன் " நீதான் ! இவையனைத்திற்க்கும் காரணம் நீதான் ! உன்னால்தான் இவையனைத்தையும் நான் செய்தேன் " . என்றான் .
வளவன் கூறிய பதிலினால் உண்டான ஆச்சரியத்தின் சுவடுகள் விஷ்ணுவர்மனின் முகத்தில் தடம் பதிக்க ஆரம்பித்தன . " என்ன உளறுகிறாய் ? இவையனைத்திற்க்கும் நான் எப்படி காரணமாவேன் . புத்தி சுவாதீனத்துடன்தான் பேசுகிறாயா ? என்றவனின் கேள்வியில் ஆத்திரமடைந்தான் வளவன் .
" ஆம் . எனக்கு புத்தி பேதலித்துவிட்டது . எப்போது நீ இந்த அரண்மனைக்கு வந்தாயோ அப்பொழுதே நான் என் மனநிம்மதியை இழந்துவிட்டேன் . அரண்மனையிலும் சரி , மக்கள் மத்தியிலும் சரி உனக்கு பிறகுதான் எனக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது . என்னைவிட உனக்குத்தான் செல்வாக்கும் அதிகமாகியது . அப்போதிலிருந்தே நான் உன்னையும் உனக்கு இவ்வளவு புகழ்வரக்காரணமாக இருந்த என் தமையனையும் வெறுக்க ஆரம்பித்துவிட்டேன் . அப்போதுதான் எனக்கு உங்கள் இருவரையும் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணமும் , ராஜ்ஜியத்தின் சிங்காதனத்தின் மீது ஆசையும் வந்தது " என்று கூறிக்கொண்டே சென்றவனின் வார்த்தைகளில் பேச்சற்றுப்போய் நின்றான் விஷ்ணுவர்மன் .
மேலும் தொடர்ந்த வளவன் " முதலில் என் தமையனின் கதையைமுடித்துவிட்டு பிறகு உன்கதையை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து நீங்கள் வேட்டையாட கானகத்திற்க்கு வரும்பொழுதே அவனைக்கொன்றுவிட முடிவெடுத்து அவன் மீது அம்பை எய்தினேன் . ஆனால் நீயோ அதனைக் கெடுத்துவிட்டாய் . நீ அவனுடன் இருக்கும் வரை அவனின் நிழல் போலவே இருந்துவந்தாய் அதனால் அவனை என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை . எனவே உன்னை முதலில் அவனுக்கு எதிரியாக்கி உன்னை அவனிடமிருந்து பிரிக்க திட்டமிட்டேன் . என் எண்ணப்படியே அனைத்தும் கச்சிதமாக நிறைவேறியது . உனக்கு எப்படியும் மரண தண்டனையே கொடுக்கப்படும் என்று நினைத்தேன் . ஆனால் நீ அங்கிருந்து தப்பித்தது நான் எதிர்பாராத ஒன்று . இருப்பினும் இதையே எனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் வழிமுறையும் எனக்கு நன்றாகவே தெரியும் " என உணர்ச்சிவசப்பட்டு அனைத்தையும்கூறி அட்டகாசமாகச் சிரித்தான் .
அந்த பயங்கர சிரிப்புச்சத்தம் இதுவரையில் அவன் கூறியதைக்கேட்டு சிலையென சமைந்திருந்த விஷ்ணுவர்மனை சுயநினைவிற்க்கு கொண்டுவந்தது .
" அடேய் மூடனே ... எப்படியடா இவ்வளவு வஞ்சத்தினையும் மனத்தினில் இருத்திக்கொண்டே உன்னால் நல்லவனாக நடிக்கமுடிந்தது . கிராதகா ... கபடவேடதாரி ....உன்னை என்ன செய்கிறேன் பார் ! " என்ற விஷ்ணுவர்மன் அதுவரை அடக்கிவைத்திருந்த அனைத்து உணர்ச்சிகளும் ஒன்றுசேர தன் வாளினை எடுத்து அவனைத்தாக்குவதற்க்காக உயர்த்தினான் .
இதனை ஏற்க்கனவே எதிர்பார்த்திருந்த வளவனும் தன்னுடைய வாளினை எடுத்து எதிர்த்தாக்குதலுக்குத் தயாரானான் . இருவரின் வாள்களும் ஒன்றோடன்று உரசி உண்டான தீப்பொறிகள் அந்த இருளில் ஏதோ மின்மினிப்பூச்சிகள்தான் பறக்கின்றனவோ என்ற பிரமையை ஏற்படுத்தின .
இருவரும் ஒருவருக்கொருவர் வாள்வீச்சில் விட்டுக்கொடுக்காமல் போராடிக்கொண்டிருந்தனர் . அரைமணிநேரம் தொடர்ந்த இந்த போராட்டத்தில் வளவனின் வாள் விஷ்ணுவர்மனின் வாளால் தட்டியெறியப்பட்டதுடன் அவனின் உடலிலும் சில கீறல்களை ஏற்படுத்தத் தவறவில்லை .
வளவனின் கழுத்தில் தன் வாளினை வைத்து " வளவா மதிகெட்ட செயலினால் உன்னை நீயே தரம் தாழ்த்திக்கொள்ளாதே. என்றைக்கும் நம் மன்னர் உன்னை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் உன்னை நடத்தியதில்லை . சிறிது சிந்தித்துப்பார் உன்னை இப்பொழுதே என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். உன்னைக் கொன்றுவிட்டு இந்த மரகதலிங்கத்தினை கொண்டுபோய் எம்மன்னனிடம் கொடுக்க இயலும் . ஆனால் உனக்கு இந்த சந்தர்ப்பத்தை தருகிறேன் . நீயே திருந்தி நம் மன்னரிடம் நடந்த உண்மை அனைத்தையும் கூறிவிடு என்றான் விஷ்ணுவர்மன்.
கழுத்தில் வைத்த ஆயுதத்தின் அழுத்தம் கூடக்கூட ஏற்பட்ட வலியினால் " நீ.. நீ கூறுவது முற்றிலும் உண்மைதான் நான்தான் உங்களிருவரையும் தவறாக எண்ணிவிட்டேன் என்னை மன்னித்துவிடு … நான் என் தமையனிடம் அனைத்து உண்மையையும் கூறிவிடுகிறேன். என்றான் வளவன்"
விஷ்ணுவர்மனும் தன் பிடியைத் தளர்த்தினான் . உடனே வளவன் விஷ்ணுவர்மனின் கையில் இருந்த ஆயுதத்தை தட்டிவிட்டு அவனின் வயிற்றில் ஒரு குத்துவிட்டான் வளவன் . இதை எதிர்பாராத விஷ்ணுவர்மனும் சிறிது நிலைகுலைந்துதான் போனான் .
ஹாஹா என்ற பேய்ச்சிரிப்பு சிரித்த வளவன் நீ இப்பொழுது யாரிடம் சென்று என்னை உண்மையை ஒப்பக்கொள்ளச் சொல்கிறாய்? அந்த லிங்கத்தை எடுத்தாலும் யாரிடம் போய் நீ நிரபராதி என நிரூபிப்பாய் ? . மன்னனிடமா ? அல்லது மக்களிடமா ? எனக்கேட்டு மறுபடியும் பைத்தியம்போல் சிரிக்க ஆரம்பித்தான் .
இவனின்செய்கை ஒன்றும் புரியாமல் வியப்பாக நோக்கிய விஷ்ணுவர்மன் " இப்பொழுது ஏன் இப்படி கூறுகிறாய் ? உன்னுடைய சொல்லின் பொருள் என்ன? " என முகத்தில் பலவித உணர்ச்சிகள் தோன்ற கேள்வி எழுப்பினான் .
விஷ்ணுவர்மனை ஏளனத்துடன் பார்த்த வளவன் " இந்நேரம் உன் மன்னன் பரலோகத்திற்கக்கு பிராயாணம் செய்துகொண்டு இருப்பான் . அதற்க்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்துவிட்டுத்தான் இங்குவந்தேன். என்றவனது எண்ணவோட்டத்தில் அன்றிரவு நிகழ்ந்த நிகழ்வுகள் காட்சிகளாக விரிந்தன.
போர்ச்செய்தி கேட்டவுடன் இரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய ராஜசிம்மன் பின் தனதறையில் உறங்கிகொண்டிருந்தான். அப்போது யாருக்கும் தெரியாமல் அரசனின் அறைக்குள் நுழைந்தான் வளவன் . அரசனின் வாயிற்காப்போன் வளவனின் ஆள் என்பதால் வளவனுக்கு இசைந்து கொடுந்தான் அவ்வாயிற்காப்போன்.
அரசனுக்கு அருகில் வந்த வளவன் தன் குறுவாளை அரசனின் மார்பை நோக்கி குத்த வந்த தருணத்தில் சட்டென்று விழிப்பு வந்த ராஜசிம்மன் திடீரென அவனின் வாளை தடுத்து, என்ன..என்ன செய்கிறாய் வளவா … ? என அதிர்ச்சியுடன் கேட்டான்.
இதை எதிர்பாராத வளவன் ராஜசிம்மனை அப்படியே மஞ்சத்தில் சாய்த்து மீண்டும் வாளை நெஞ்சில் குத்துவதற்கு ஓங்கினான். "வளவா… ஏன் இப்படி செய்கிறாய் … நீயும் விஷ்ணுவோடு சேர்ந்தே துரோகியாகிவிட்டாயா? என ராஜசிம்மன் கேட்டதும், " துரோகி விஷ்ணு அல்ல மூடனே நீதான். எனக்கு கொடுக்க வேண்டிய முன்னுரிமை,மரியாதை அனைத்தையும் விஷ்ணுவர்மனுக்கு கொடுத்து என்னை அவனுக்கு அடுத்தபடியாகத்தானே வைத்திருந்தாய். சகோதரனை விட அவனுக்கு பதவியை அளித்து வைத்திருந்தாயே நீ துரோகியா அல்லது நான் துரோகியா?
உன்னைக் கொன்று சிங்காதனத்தை பறிக்கும் என் ஆசைக்கு தடையாக இருந்த விஷ்ணுவர்மனின் மேல் பழியைச் சுமத்தி அவனின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து உன்னை வெளிவரச்செய்தேன்" என ஆவேசத்துடன் கூறினான் வளவன்.
அவன் கூறக் கூற அதிர்ச்சியில் சமைந்திருந்த ராஜசிம்மனின் மார்பில் தன் குறுவாளை ஓங்கினான் வளவன்.
"அடேய் நம்பிக்கை துரோகி… உன்னால் என் உற்ற நண்பனையே தவறாக எண்ணிணேனேடா… உன்னை என் இறைவன் பார்த்துக் கொள்வானடா … விஷ்ணு என்னை மன்னித்துவிடு … என்னை மன்னித்துவிடு "என்றபடியே அனற்றிக்கொண்டிருந்த ராஜசிம்மனை ஏளமாகப் பார்த்தபடியே வெளியேறிய வளவன் வாயிற்காப்போனிடம் கண்ணாலேயே சமிக்ஞை செய்து அரண்மனையிலிருந்து வெளியேறினான்.
நடந்தை எல்லாம் விஷ்ணுவிடம் சொல்லிக்கொண்டிருந்த வளவன் மேலும் " நீதான் எதிரிநாட்டு மன்னனுடன் சேர்ந்து அவன் தரும் செல்வங்களுக்கு ஆசைப்பட்டு மன்னனை கொலைசெய்தாய் என்ற செய்தியினை என் ஆட்கள் இந்நேரம் பரப்பியிருப்பர் . நீ வரகுணனின் ஆள்தான் என்று அனைவரும் நம்புவர் . கொலைப்பழியும் உன்மீதுதான் திருட்டுப்பழியும் உன்மீதுதான் . " எனக்கூறினான் .
அதிர்ச்சியின் மேல் அதிர்ச்சியாக அவன் இறக்கிய செய்தி விஷ்ணுவர்மனுக்கே சிறிது ஆட்டம் கண்டது . சிலைப்போல் நின்றிருந்த விஷ்ணுவர்மனை அந்தக்குன்றின் மீது விசையுடன் தள்ளிவிட்டான் வளவன் . விழுந்த வேகத்தில் விஷ்ணுவர்மனின் தலையில் அடிபலமாகபட்டுவிட்டதால் அப்படியே குன்றின்மேலேயே சாய்ந்துவிட்டான் .
" வரகுணன் தரும் செல்வங்களுக்கு மதிமயங்கி அவனின் கூட்டாளியாகி அவன் பேச்சினைக்கேட்டு நீ என் அண்ணனைக்கொன்றுவிட்டதாகவும் , என் அண்ணனைக்கொன்று தப்பியோடிவந்த உன்னை விரட்டிச்சென்று கொன்றுவிட்டு நீ மறைத்துவைத்த சிவலிங்கத்தையும் கைப்பற்றிக்கொண்டுவந்துவிட்டேன் எனவும் மக்களிடம் சொல்லி அவர்களிடம் உன் மீதும் வரகுணணின் மீதும் பழியைச்சுமத்தி வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்குவேன் . பிறகு இந்த ராஜ்ஜியத்தின் சிங்காதனத்தின் அமரும் உரிமையையும் பெற்றுவிடுவேன் " என தான் வெற்றிபெற்றுவிட்டோம் என நினைத்து ஆனந்தத்தில் கொக்கரித்துக்கொண்டிருந்தான் வளவன் .
அரைமயக்கத்தில் இருந்த விஷ்ணுவர்மனுக்கு இவன் நிச்சயமாக வெற்றிபெற்றுவிடக்கூடாது என்ற எண்ணம் வேறூன்றியது . இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்தவன் தன் இடையிலிருந்த குறுவாளை வளவன் கவனியா வண்ணம் உருவினான் . சரியாக அவன் நெஞ்சில் தன் கத்தியை பாய்ச்சியவன் " உன்னைப்போன்ற ஈனப்பிறவி என் ஈசனைத்தொடுவதற்க்கு அருகதை அற்றவன் . உன் கையால் என் இறைவனை தொட அனுமதிப்பது நான் அந்த இறைவனுக்கும் எம்மன்னனுக்கும் செய்யும் துரோகமாகிவிடும் . ஈனப்பிறவியே செத்து ஒழி . " என்று கர்ஜித்தான் .
எதிர்பாரத திடீர்செயலினால் உயிர்வலியில் துடித்த வளவன் , கத்தி குத்திய இடத்தில் கையை வைத்துக்கொண்டு விஷ்ணுவர்மனை மீண்டும் பலமாக அந்த குன்றின் பாறையின்மீது தள்ளிவிட்டு தானும் தரையில்விழுந்து துடிதுடித்தான் . இம்முறை மீண்டும் பலமாக பின்மண்டையில் அடிபடவே தான் இறக்கும் தருணம் வந்துவிட்டது என உணர்ந்த விஷ்ணுவர்மன் " அரசே .... என்னை மன்னித்துவிடுங்கள் நான் கொடுத்த வாக்கை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது . இப்பிறவியில்தான் என்னால் நான் செய்து கொடுத்து சத்தியத்தை காப்பாற்ற இயலவில்லை . புனர்ஜென்மம் என்பது உள்ளது என்றால் என்னுடைய அடுத்த பிறவியில் அந்த மரகதலிங்கத்தை கண்டுபிடித்து நம் ஆலயத்தில் அதைக்கொண்டு சேர்ப்பேன் . இது என் ஈசனின் மீது ஆணை " . என்ற வார்த்தையுடன் அவன் மூச்சு நின்று போனது .
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top