போட்டி 9 # 3 காதல்

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு  முன் :

கவலைகள் மறந்து 
சிறகுகள் விரித்து 

வண்ணத்து பூச்சியாய் 
விண்ணில் பறந்து 

குறும்புகள் பல செய்து 
குழந்தை போல் சேட்டைகள் 

பல செய்தவள் உன் 
ஓர் நொடி பார்வை பட்டு 

என் பெண்மை உணர்ந்து 
நானப்பூக்கள் உதிர்கின்றேன்!

என்னுள் புதைந்திருந்த 
எண்ணமுடியா உணர்வுகளை 

உன் ஒற்றை புன்னகை 
கொண்டு மீட்டெடுத்தாய் 

மொழியமுடிய காதலை 
என் மௌனத்தாலே அறிந்துகொண்டாய் 

உயிரின் பாதியாக இருக்கும் நீ 
என் பதியாக வருவாயா?

சின்ன சின்ன சண்டைகளிட்டு 
செல்ல செல்ல கோபங்கள் பட 
என் கன்னம் வருடி 
கொஞ்சும் மொழிகள் மொழிவாயா?

தளர்ந்து முதிர்ந்த வயதினிலும் 
என் விரல்கள் பிடித்து நடப்பாயா?

இனிமையான கனவுகளுடனும் 
நினைவுகளுடனும் உன் 
கைகோர்த்து வாழ்வில் பயணிக்க 
காத்திருக்கும் உன்னவள்

திருமணத்திற்குப் பின் :

தவறுகள் பல செய்து 
விளைவுகளை ஏற்றுநிற்க 
தட்டிக்கொடுத்து தந்தையானாய்!

பெற்றவர்கள் யாருமின்றி 
பாசத்திற்கு நான் ஏங்க 
தலைகோதி தாயானாய்!

சோகத்தில் சோர்ந்த போது 
தோள்தந்து தோழனானாய்!

பெண்மையை உணரவைத்து 
மனம்பறித்து காதலனானாய்!

முழுமையற்று நின்றிருந்த 
என் கரம்பிடித்து கணவனானாய்!

தாய்மை இழந்து என் 
வாழ்வே வெறுமையாக 
மடிசாய்ந்து என் சேய்யானாய்!

வறண்ட பாலைவனமான 
என் வாழ்க்கையில் 
குளிர்ந்த நீரூற்றாய் நீ தோன்றி 
காலத்தால் ஏற்பட்ட காயங்களுக்கு 
வலிதீர்க்கும் மருந்தானாய்!

பாதையில் உள்ள முட்கள் மேல் 
என் பாதங்கள் பட்டுவிடாமல் உன் 
கரங்களை தரையாக்கி காத்தவனே 
உன்னை விட்டு பிரியும் நொடி 
என் வாழ்வின் இறுதி நொடி!!!

______________________________________________

குழு க (ஒரு ஆணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

சிறகுச் சீமாட்டியே...

நீ உணர்ந்து, நிலை உதிர்த்த
உன்,
நானாப் பூக்கள் வழியினிலே....

என்,
புன்னகை இசைக்கும், இசை உனதாயின்
இசைகொள்ள துணியும், இசைவு நான் !
உன்,
பேசா மொழியும் பேசியதே !
என் பொய்யா மொழியாய் ஆகியதே !

பாதி கேட்கும் பெண்ணை – நம்
உயிர், உடல் கோர்த்து மறு
மாதொரு பாகனும் செய்வேனே...

சின்னச்,
சிணுங்கள் நான் ரசித்தே,
உன் கன்னம் கொய்து, திண்ணம் செய்து...
என்,
காதல் மொழியில்
உன்,
கால் நனைப்பேன் !

கை கொள்ளும் கவியே,
இக்காலம், யுகமென கடந்தால் என்ன ?
காதல் என்றும் களமாடும் !

என் இருப்பு கொண்டு
உன் காத்திருப்பு கொல்வேன் இது தினம் ....
உன் விரல் வழி ,
என் உயிரும்...

திருமணத்திற்குப் பின்:

என்னவள் – நிகழ்வினில்
நிறை மதி நில மகள் !
இணைந்து நிற்கும் என் இணையே -நீ
உறவின் வழியே உயிர்தனை உரைத்தாய்...

உன்னில் கொண்ட உயிர் வலி யாவும் 
கண்ணில் காணும் கானல் நீராய்.... !!!

கங்கை பொங்கி கரை கொண்டாலும்
மங்கை உனது மனம் காப்பேனே...

நொடி நொடி வாழ்கை நமக்காய் – ஆனபின்
முன் நொடி பின் நொடி – பேதம் ஏனடி

சாவும் சாகும் , நம் மூச்சின் முனங்களில்...

அழகுத் தமிழின் இலக்கியம் நீ
என்றும் உன்னில் இலக்கணம் நான்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top