45 அன்புச் சங்கிலி...
45 அன்புச் சங்கிலி...
ஆனந்த குடில்
"நான் கிளம்புறேன்" என்றான் ஸ்ரீராம், மிதிலாவின் பெற்றோரிடம்.
"நீங்க இங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி" என்றார் சாந்தா.
"சீக்கிரமே பூ முடிக்க உங்க வீட்டுக்கு வருவோம்" என்றான் ஸ்ரீராம், மிதிலாவை பார்த்தபடி.
"நாங்க உங்களுக்காக காத்திருப்போம்" என்றார் ஆனந்தன்.
"பை" மீண்டும் மிதிலாவை பார்த்து கூறிவிட்டு சென்றான் ஸ்ரீராம்.
விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒவ்வொருவராய் கிளம்பிச் சென்றார்கள், மிதிலாவின் தோழி அருணா ஒருத்தியைத் தவிர. அன்று மிதிலாவுடன் அங்கேயே தங்குவது என்று அவள் தீர்மானித்திருந்தாள். தனது உடைகளை மாற்றிக் கொண்டு, தனது அறையை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் மிதிலா. தன் பார்வையை நகர்த்தாமல், மிதிலாவையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அருணா. அதை உணர்ந்த மிதிலா, தன் புருவத்தை உயர்த்தி,
"என்ன?" என்றாள்.
"உன்னுடைய மேரேஜ் ப்ரொபோஸலை பத்தி என்கிட்ட சொல்லாம எப்படி நீ மறந்த?"என்று கேள்வி எழுப்பினாள்.
"நான் அதை சொல்ல மறக்கல, அருணா" என்று மென்று முழுங்கினாள்.
"இது தான் முதல் தடவை, நீ என்கிட்டயிருந்து ஒரு விஷயத்தை மறைக்கிறது. ஏன் மிதிலா? நீ ரொம்ப மதிக்கிற ஒருத்தரை தானே நீ கல்யாணம் பண்ணிக்க போற...? அதுக்காக நீ சந்தோஷமா தான் இருக்கணும்?"
அவள் அருகில் வந்தமர்ந்து,
"எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அரு..." என்றாள் மிதிலா.
"பயமா? ஏன்?"
அவளை வலி நிறைந்த பார்வை பார்த்தாள் மிதிலா. அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டாள் அருணா.
"மிதிலா, தயவு செய்து உன்னுடைய கடந்த காலத்தை கொண்டு வந்து இதுல சேர்க்காத..."
"நான் எப்படி இதை அவர்கிட்டயிருந்து மறைக்கிறது?"
"வேற வழி இல்ல, மிதிலா. தயவு செய்து இந்த நல்ல சம்பந்தத்தை கெடுத்துடாத. ஒரு நல்ல மனுஷனை மிஸ் பண்ணிடாத..."
"அவர் நல்லவர்... அது தான் எனக்கு உறுத்தலா இருக்கு. தான் நல்லவன்னு நிரூபிக்க அவர் என்ன செஞ்சார் தெரியுமா...! நினைக்கும் போதே எனக்கு பதறுது. ஆனா நான்...? தெரிஞ்சே அவர்கிட்ட உண்மையை மறைக்கிறேன். அவருக்கு நான் தகுதியானவளா இருப்பேன்னு எனக்கு தோனல"
"இங்க பாரு மிதிலா, அவர் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறார். அவருக்கு, இந்த அளவுக்கு உன்னை பிடிச்சிருக்குனா, நிச்சயம் உன்னை புரிஞ்சுக்குவாரு"
"ஆனா, நான் அவர்கிட்ட உண்மைய மறைச்சிட்டேன்னு தெரிஞ்சா அவர் என்னை தப்பா நினைக்க மாட்டாரா? அதுக்கப்புறம் நான் எப்படி அவர் முகத்துல முழிப்பேன்?"
"அப்படின்னா ஒன்னு பண்ணு"
"என்ன?"
"அவரைக் கல்யாணம் பண்ணிக்கோ. சரியான சந்தர்ப்பம் பார்த்து, அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடு"
"அதைக் கேட்டு அவர் அப்செட் ஆயிட்டா என்ன செய்றது?"
"அவர் அப்செட் ஆவார்னு நினைக்கிறாயா நீ?'
"மாட்டார்னு எப்படி சொல்ல முடியும்? என்னால எதையுமே கெஸ் முடியல"
"ஏன்னா, நீ குழப்பமா இருக்கே"
"ரொம்ப ரொம்ப"
"நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு. உனக்கு அவரை பிடிச்சிருக்கு இல்ல?"
ஒரு கணம் திகைத்தாள் மிதிலா.
"உண்மையை சொல்லு"
ஆமாம் என்று மெல்ல தலையசைத்தாள்.
"இப்படிப்பட்டவரை யாருக்கு பிடிக்காம போகும்? ஆரம்பத்துல அவருடைய பிடிவாதத்தை பார்த்து நான் ரொம்ப பயந்தேன். ஆனா, இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவர் கோடியில் ஒருத்தர்..."
"அது உண்மைன்னா, அவர் உன்னை புரிஞ்சுக்குவாரு"
"அவர் என்னை வெறுத்தா, அதை என்னால தாங்க முடியாது, அருணா"
"வெறுப்பை நினைச்சு மிதிலாவா பயப்படுறா?"
"நான் வெறுப்பை நெனச்சு பயப்படல. அந்த வெறுப்பு அவர்கிட்டயிருந்து வந்துடுமோன்னு தான் பயமா இருக்கு. நான் முதல் முதல்ல ஆஃபீஸ்ல சேர்ந்தப்போ அவரை எனக்கு சுத்தமா பிடிக்கல. அவருடைய ரூட் பிஹேவியரை பார்த்து, நான் அவர்கிட்ட இருந்து விலகியே இருந்தேன். ஆனா, அவருடைய நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சப்போ, அவருக்கு என்னுடைய வேலை செய்ற விதம் பிடிச்சதுன்னு நினைச்சேன். அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னப்ப என்னால நம்பவே முடியல."
"அப்போ, நீ முடியாதுன்னு சொல்லலையா?"
"சொன்னேன். அதனால தான் அவர் என்னை பிளாக்மெயில் பண்ணாரு"
"அப்படின்னா உன்னோட பிரச்சனை முடிஞ்சிது. அவர் உன்னை பிளாக்மெயில் பண்ணாரு... வேற வழி இல்லாம நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட. சிம்பிள்..."
சலிப்புடன் பெருமூச்சு விட்டாள் மிதிலா.
"என்கிட்ட உண்மையை சொல்லு, மிதிலா. உண்மையிலேயே அவர் உன்னை ப்ளாக்மெயில் பண்ணதுக்காக மட்டும் தான் நீ அவரை கல்யாணம் பண்ணிக்கிறியா?"
உதட்டைக் கடித்து இல்லை என்று தலையசைத்தாள் மிதிலா.
"நான் யுவராஜ்கிட்ட கேட்டிருந்தா, நிச்சயமா அவர் மாமாவுக்கு ஒரு நல்ல வேலையை கொடுத்திருப்பார்"
"நிஜமாவா?"
"ஆமாம்... மாமாவுக்கு புரமோஷன் கொடுத்து, அவர் காரியத்தை சாதிச்சிக்க முப்பத்தி இரண்டு கோடி கொடுத்து அவங்க கம்பெனியோட ஷேர்ஸை வாங்கினாரு... அவர் எந்த அளவுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பத்தோட இருக்காருன்னு எனக்கு புரியாம இல்ல... ( சற்று நிறுத்தியவள்) எனக்காக நீ ஒரு ஹெல்ப் பண்றியா?"
"என்ன செய்யணும்?"
"என்னோட சார்பா அவர்கிட்ட உண்மையை நீ சொல்லுவியா?"
"தேவையில்லாம உன்னை நீ ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத."
"அவர் கூட எனக்கு ஒரு நல்ல ரெலேஷன்ஷிப் இருக்கணும்னு நினைக்கிறேன். அவருக்கு உண்மை தெரியிற வரைக்கும், என்னால அவர்கிட்ட நெருங்கவே முடியாது"
"ஓ... அப்படின்னா, மேடம் அவர்கிட்ட *நெருங்க* தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?" என்று அருணா அவள் காலை வார, அவளைப் பார்த்து முறைத்தாள் மிதிலா.
"நீ சொல்றதை எல்லாம் பார்த்தா, அவரே உன்கிட்ட நெருங்குவாருன்னு எனக்கு தோணுது..." என்று அருணா கூற, உதடு கடித்து வெட்கப்பட்டாள் மிதிலா.
"எல்லாம் நல்லபடியா நடக்கும். எல்லாத்தையும் கடவுள்கிட்ட விடு."
சரி என்று தலையசைத்தாள் மிதிலா.
மறுநாள் காலை
சூரியனின் செங்கிரன கதிர்கள், கண்ணாடி ஜன்னலின் வழியாக ஸ்ரீராமின் முகத்தை வருடியது. நெட்டி முறித்த அவன், நர்மதாவின் குரல் கேட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
"அக்கா, நீங்க எப்ப வந்தீங்க? வற்ரதுக்கு ரெண்டு நாள் ஆகும்னு சொன்னீங்களே...? மாமாவுடைய அத்தை எப்படி இருக்காங்க?"
"நாங்க நேத்து நைட் 11 மணிக்கு வந்தோம். அவங்க அத்தை நல்லாவே இருக்காங்க. அவங்களுக்கு பெருசா எந்த அடியும் படல. நாங்க போனதே வேஸ்ட்..." என்று சிரித்தாள் நர்மதா.
அங்கு வைக்கப்பட்டிருந்த பூ, பழங்கள், இனிப்பு வகைகளை பார்த்து,
"நீங்க எங்கயாவது கிளம்புறீங்களா?" என்றான்.
"மிதிலா வீட்டுக்கு போறோம்"
"மிதிலா வீட்டுக்கா? எதுக்கு?"
"பூ முடிக்க..."
"என்ன...? இப்பவா?" என்றான் அதிர்ச்சியாக.
"இப்போ தான்..."
"என்னக்கா திடீர்னு? மணி 7 தான் ஆகுது"
"நான் ஏற்கனவே சாந்தா ஆன்ட்டிகிட்ட பேசிட்டேன். பூ முடிக்கும் போது, கல்யாண பொண்ணு கண்டிப்பா இருக்கணும். அதுக்காகத் தான் மிதிலா ஆஃபீஸுக்கு போறதுக்கு முன்னாடி நாங்க அவங்க வீட்டுக்கு போறோம்."
"ஆனா, எதுக்கு இவ்வளவு அவசரம்?"
"ஊர்மிளாவோட ஃபேமிலி இன்னைக்கு லண்டன்ல இருந்து வராங்க. அவங்க இன்னைக்கே பூ முடிக்க சொல்லி கேக்குறாங்க. அவங்க வீட்டுக்கு சாயங்காலம் போகலாம்னு இருக்கோம். நீ லக்ஷ்மணனுக்கு மூத்தவன். அதனால, முதல்ல மிதிலா வீட்டுக்கு போறோம். சுத்தமா நேரமே இல்ல..." என்று ஒரே மூச்சாய் கூறி முடித்தாள் நர்மதா.
"ஆனா, இதைப் பத்தி நீங்க என்கிட்ட எதுவுமே சொல்லலயே..."
"ஏன்னா, இதுக்கு நீ வர வேண்டியதில்ல..."
"அப்படின்னா, நான் உங்க கூட வர போறது இல்லையா?" என்றான் அதிர்ச்சியாக.
"இல்ல... இதுக்கு மாப்பிள்ளை அலவுட் இல்ல"
"இதென்ன அநியாயம்? இது என்னோட மேரேஜ்... நான் வரக்கூடாதா?"
"மேரேஜ்க்கு நீ வாரலாம்... இப்போ இல்ல..." கிண்டலாய் கூறிவிட்டு வாய்விட்டு சிரித்தாள் நர்மதா.
"வந்தா என்ன செய்வீங்க?"
"பொண்ணோட அப்பா, அம்மா, கொஞ்சம் கூட அடங்காத ஒரு பையனுக்கு நம்ம பொண்ணை கொடுக்கணுமான்னு யோசிப்பாங்க."
"ஓ... அப்படியா?" என்றான் கைகளை கட்டிக்கொண்டு.
அவன் கையில் ஒரு அடி போட்டாள் நர்மதா.
"உன்னோட திமிரு, தெனாவெட்டை எல்லாம் உன் மாமியார் வீட்லயாவது காட்டாம இரு"
தன் கண்களை சுழற்றினான் ஸ்ரீராம்.
"ஏன் ராமு, ஆஃபீஸ்ல எல்லா நேரமும் மிதிலா உன்கூட தான் இருக்காங்க. இருந்தாலும் நீ அவங்க வீட்டுக்கு வரணுமா?"
"உங்களுக்கு மிதிலாவை பத்தி தெரியாது கா. என்கிட்ட *என்னை* மாதிரியே நடந்து என்னை இரிட்டேட் பண்றா..."
அதைக்கேட்டு கலகலவென சிரித்தாள் நர்மதா.
"நீ ஒரு இரிட்டேட்டிங் ஃபெல்லோன்னு இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டியே..."
"ம்ம்ம்... அந்தம்மா ரொம்ப ப்ரொஃபஷனல் தெரியுமா...? பர்சனலயும், ப்ரொஃபஷனலயும் மிக்ஸ் பண்ணவே மாட்டாங்க..." என்றான் சிரித்தபடியே தன் புருவத்தை உயர்த்தி.
"சபாஷ்... சரியான போட்டி" என்று விழுந்து விழுந்து சிரித்தாள் நர்மதா.
"ஆமாம், அவளை வச்சிக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல"
"மிதிலா ரொம்ப நல்ல பொண்ணு. ரொம்ப ஓவரா திமிரோடு இருக்கிறவங்ககிட்ட, அவங்க அப்படித் தான் இருப்பாங்க..." என்று அவன் தலையில் விளையாட்டாய் கொட்டினாள் நர்மதா.
"பாக்கலாம், எவ்வளவு நாளைக்கு அப்படியே இருக்காங்கன்னு..."
சிரித்தபடி தன் அறைக்குச் சென்றான் ஸ்ரீராம்.
பாட்டியும், புஷ்பாவும் தயாராகி கீழ்தளம் வந்தார்கள்.
"சீக்கிரம் வா பிரியா, நமக்கு லேட் ஆகுது" என்று கீழிருந்து கத்தினார் புஷ்பா.
மறுபடி கீழே வந்த ஸ்ரீராம், தன் அருகில் வருமாறு நர்மதாவுக்கு சைகை செய்தான். அவள், அவனருகில் வந்தவுடன் அவளிடம் ஒரு சிறிய டப்பாவை கொடுத்தான்.
"இதை மிதிலாவை போட்டுக்க சொல்லுங்க" என்றான்.
அதில், ஆங்கில எழுத்தான எஸ் டாலருடன், கூடிய பிளாட்டினம் சங்கிலி இருந்தது.
"நீ இதை எப்ப வாங்கினே?" என்றாள் ஆச்சரியமாய் நர்மதா.
"அவங்க கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட உடனே"
"ரொம்ப அழகா இருக்கு"
"மிதிலாகிட்ட இதை கழட்டக் கூடாதுன்னு சொல்லுங்க"
"ஓ... அவங்க மனசுல உன்னோட பேர் எப்பவும் இருக்கணுமா?"
"பேர் மட்டும் இல்ல..." என்று கூறி, நர்மதாவை திகைக்க வைத்தான் ஸ்ரீராம்.
இதற்கிடையில், ஆனந்த குடில்
தனது யோகப் பயிற்சியை முடித்துவிட்டு மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருந்தாள் மிதிலா. அவளது அறைக்குள் பரபரவென நுழைந்தார் சாந்தா.
"மிதிலா, சீக்கிரம் ரெடி ஆகு. ஸ்ரீராம் வீட்டிலிருந்து எல்லாரும் பூ முடிக்க வராங்க"
"என்னது...? இப்பவா?"
"ஆமாம்... ஊர்மிளா ஃபேமிலி இன்னைக்கு லண்டனிலிருந்து வராங்களாம். "
ஆமாம் என்று தலையசைத்தாள் மிதிலா.
"அவங்க இன்னைக்கே பூ முடிக்கணும்னு சொல்றாங்களாம். ஸ்ரீராம் மூத்தவர் இல்லையா, அதனால, அவங்க முதல்ல நம்ம வீட்டுக்கு வந்து உனக்கு பூ முடிக்க நினைக்கிறாங்க."
"ஓ..."
"போ... சீக்கிரம் குளிச்சுட்டு ரெடியாகு"
"அருணா குளிச்சிகிட்டிருக்கா. அவ வெளியே வரட்டும்"
"சரி. சீக்கிரம் ஆகட்டும். நிறைய வேலை இருக்கு" என்று மறுபடியும் வெளியே ஓடினார் சாந்தா.
சரியாக எட்டு மணி அளவில், ஸ்ரீராம் குடும்பத்தினர் மிதிலாவின் வீட்டிற்கு வந்தார்கள். மெரூன் நிற பிளெய்ன் சுடிதாருக்கு, சந்தன நிற துப்பட்டா அணிந்திருந்த மிதிலா, அவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு, அவர்கள் முன் அமர்ந்தாள். புஷ்பாவும், நர்மதாவும், அடர்த்தியாய் தொடுக்கப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரத்தை மிதிலாவுக்கு அழகாய் வைத்துவிட்டார்கள். ஸ்ரீராம் கொடுத்த டப்பாவை வெளியில் எடுத்தாள் நர்மதா.
"அது என்னது, நர்மதா?" என்றார் பாட்டி.
"இது மிதிலாவுக்கு ராமுவுடைய ஸ்பெஷல் கிஃப்ட். இதை போட்டுக்கங்க மிதிலா" அந்த பிளாட்டினம் சங்கிலியை மிதிலாவிடம் கொடுத்தாள் நர்மதா.
அதை வெளியில் எடுத்த மிதிலா, அதில் இருந்த எஸ் எழுத்தைப் பார்த்துப் பேச்சிழந்தாள்.
"இது மூலமா, நம்ம ராமு மிதிலாவுக்கு ஏதோ சொல்ல நினைக்கிறான் போல இருக்கு..." என்றார் புஷ்பா கிண்டலாய்.
"வேற என்ன? தன்னோட பேரை ரெஜிஸ்டர் பண்ணிட்டான்" என்றார் பாட்டி.
தனது உணர்வுகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அதை தன் கழுத்தில் அணிந்து கொண்டாள் மிதிலா. எஸ் எழுத்து அவள் கழுத்தில் ஜொலித்தது.
"ப்ளீஸ், அதை கழட்டாதிங்க, மிதிலா" என்றாள் நர்மதா.
சரி என்று புன்னகைத்தாள் மிதிலா.
"நீங்க கவலைப்படாதீங்க. அவ அதை கழட்ட மாட்டா. நான் சொல்றது சரி தானே?" என்றாள் அருணா கிண்டலாய்.
அவளை அமைதியாய் இருக்க சொல்லி மிதிலா கண்களால் சைகை செய்ய, களுக்கென்று சிரித்தாள் அருணா.
"ஊர்மிளாவுடைய பேரன்ட்ஸ், இந்த கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்னு சொல்றாங்க. அதுல உங்களுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே?"
"எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல." என்றார் ஆனந்தன்.
"நாளைக்கு சாயங்காலம் நிச்சயதார்த்தத்தை சிம்பிளா செஞ்சிட்டு, இருபத்தஞ்சாம் தேதி கல்யாணத்தை வச்சிக்கலாம்" என்றார் பாட்டி.
ஆனந்தனும், சாந்தாவும் சரி என்று தலையசைத்தார்கள். ஆனந்தனை கவலையுடன் பார்த்தாள் மிதிலா. ஏற்கனவே, பிருந்தாவின் திருமணத்திற்கு நிறைய கடன் வாங்கியிருந்தார் ஆனந்தன். தன்னுடைய திருமணத்திற்கும் அவர் கடன் தான் வாங்குவார் என்று அவளுக்கு தெரியும். தனது அப்பாவின் தோளில் சுமத்தப்பட்டிருந்த சுமையை நினைத்த போது அவளுக்கு கவலையாக இருந்தது.
"நாங்க சாயங்காலம் ஊர்மிளா வீட்டுக்கு போறோம்." என்றார் புஷ்பா.
"நல்லது..." என்றார் சாந்தா.
"வர்ற வியாழக்கிழமை, எங்க நர்மதா, தினேஷோட கல்யாண நாள். அதுக்கு நீங்க எல்லாரும் வந்து அவங்களை ஆசீர்வாதம் பண்ணனும்" என்றார் பாட்டி, ஆனந்தன், சாந்தாவை பார்த்து.
"நிச்சயமா வரோம் மா" என்றார் ஆனந்தன்.
ஸ்ரீராம் வீட்டார் அங்கிருந்து கிளம்பினார்கள். தனது அறைக்கு வந்த மிதிலா கண்ணாடியின் முன் நின்றாள். தனது கழுத்தில் இருந்த எஸ் என்ற எழுத்தை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தனது வாழ்க்கையாகவும்... எதிர்காலமாகவும்... எல்லாமுமாகவும் மாறப்போகும் அந்த எழுத்தை பார்த்து அவள் இதழ்கள் புன்னகை புரிந்தன.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top